Saturday 11 August 2012

மதுபான கடை - ஓர் உன்னத அனுபவம்

 

ஈரோடுக்கும் பெருந்துறைக்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் காந்திஜெயந்திக்கு முந்தின நாள் ஒரு டாஸ்மாக் பார் ஷட்டர் திறந்து இரவு மூடும் வரை அங்கு நடைபெறும் சம்பவங்களை மட்டும் திரைப்படமாக தந்திருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன்.  கதை என்பதைத் தேடாதீர்கள் என்ற துணிச்சலான அறிவிப்புடன் தான் படம் துவங்குகிறது.  கோடிகளில் புரளும் ஹீரோ, ஐட்டம்/குத்து பாடல், புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்கள், சந்தானம் இவை எதுவும் இல்லாமல் ஒரே ஒரு 7D கேமராவில் இரண்டு மணி நேர சுவாரசியத்தை வழங்கியிருக்கிறார்கள்.  கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஆவணப்பட வகைக்குள் சென்றுவிடும் அபாயமுள்ள கருவை அற்புதமான திரைக்கதை, இயல்பான நடிப்பு, மாறுபட்ட இயக்கம் மூலம் அநாயசமாக கடந்து ஜெயித்திருக்கிறார்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக எவரும் செய்யத் துணியாத கிளைமேக்ஸ் என்ற ஒன்று இல்லாமலே படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.


இப்படத்திற்கு சென்ஸார் "A" சான்றிதழ் வழங்கியுள்ளது.   படத்தில் குடிக்கும் காட்சிகள் நிறைய உள்ளதால் அப்படிக் கொடுத்தார்களாம்.  அப்போ, "அஞ்சாதே", "சிவா மனசுல சக்தி", "சென்னை-28" படங்களை எல்லாம் என்னடா சொல்வீங்க..?  படத்தின் பெயர் "மதுபான கடை" என்று இருப்பதால் மாயாஜால், ags , சத்யம், ஐநாக்ஸ், அபிராமி  மல்டிப்ளெக்ஸ் முதலாளிகள் இதை தங்கள் திரையரங்குகளில் திரையிட்டு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்ள விரும்பவில்லையாம்.  அடப் பன்னாடைகளா, Cocktail , Hang Over என்ற படங்களை மட்டும் எந்த மயிருக்கு ரிலீஸ் செய்து அழகு பார்த்தீர்கள்.  ஒருவேளை இந்த படத்திற்கு Cheers, Bottom"s Up என்று பெயரிட்டிருந்தால் இந்த ஆங்கில அடிவருடிகள் வாங்கியிருப்பார்களோ என்னமோ!!

படத்தின் பிரதான கேரக்டர்கள் போலிஸ் ஸ்டேஷனில் பெட்டிஷன் எழுதும் மணி மற்றும் பார் கஸ்டமர்களிடம் ஆட்டையைப் போட்டு குடிக்கும் ஒரு பெரிசு.  இவர்களுடன் மூன்று சப்ளையர்கள், ஒரு சமையல்காரன், பாத்திரம் கழுவும் ஆயா, டேபிள் துடைக்கும் பையன், டாஸ்மாக் கடை ஊழியர், பெட்டிக் கடைக்காரர், பொய் சொல்லி ஓசி குடி குடிக்கும் இளைஞன், மாமூல் போலிஸ், பார் முதலாளி, அவரின் பெண், கடவுள் வேடம் போட்ட இரண்டுபேர், மனநிலை பாதிக்கப் பட்டவர், இவர்களுடன் அங்குவரும் கஸ்டமர்கள்.  இவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே இப்படம்.

கடை மூடியாச்சு எல்லாம் வெளியே போ என்று சொல்லும் பாரின் முதாளியைப் பார்த்து பெட்டிஷன் மணி
"உழைக்கும் மக்களே, குடிகார தொழிலாளர்களே, பணம் குடுத்து குடிப்பவனை அடித்து விரட்டும் இந்த முதலாளி மூர்த்திக்கு எதிராக ஒன்று சேர், நாம ஸ்ட்ரைக் பண்ணுவோம், உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம்" என்ற உரையுடன் ஆரம்பிக்கும் தனது ஆளுமையையை  இறுதிவரை விடாமல் தொடர்கிறார்.  பார் முதலாளியிளிருந்து டாஸ்மாக் ஊழியர் வரை இவர் அனைவரையும் தன்னுடைய பேச்சாற்றலால் படுத்தியெடுப்பது படத்திற்கு சரியான சைடு டிஷ்.

மணியின் சில மணியான வசனங்கள்...
"நம்ம இன்னைக்கு நேத்தா குடிக்க ஆரம்பிச்சோம், சங்க காலத்தில இருந்து குடிக்கிறோம்..."
"அவ்வையாரும் அதியமானும் ஒன்னா குடிச்சிருக்காங்க தெரியும்ல..."

"நீ குழந்தைத் தொழிலாளி, நீ சப்ளை செய்ய வேண்டாம்..."
"நம்ம தள்ளாடருதுனாலதான் கவர்மெண்ட்டு ஸ்டெடிய நிக்குது, நம்ம ஸ்டெடி ஆகிட்டோம்னா, கவர்மெண்ட்டு தள்ளாட ஆரம்பிச்சுடும்..."
"குடிகாரனை தனி ஆள்ன்னு நெனச்சிடாதீங்க, அவன் ஒரு சமூகம்..."
"நாங்க இங்க பணத்தை கொட்டுறதாலதான் அரசாங்க வேலை  செய்யறவன் மாசம் பொறந்த கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கறான்..."

இவரைக் கண்டாலே அனைவரும் விலகி இருக்க, காதல் தோல்வியில் முதல் முறையாக சரக்கடிக்க வந்த இளைஞன் இவரை படுத்தி எடுப்பது தேர்ந்டுத்த  ஒயின்ஷாப் நகைச்சுவை. 


பக்தர்களிடம் வசூல் நடத்தும் ராமனும், அனுமனும் அதே கெட்டப்பில் பாரில் முட்டை மற்றும் மூளை வறுவலுடன் சரக்கடித்து திடுக்கிட வைக்கிறார்கள்.  ராமன் அதிலும் ஒருபடி மேலே போய் சரக்கு பத்தாமல் பாரில் வேலை செய்யும் பையனிடம் "கட்டிங்" கடன் கேட்கிறார்.  அப்போது ராமன் சொல்லும் வசனம், "கஞ்சிக்கே  லாட்டரி அடிக்கும் போது, கட்டிங் கொடுப்பவனே கடவுள்" (இந்து அறநிலையத் துறை என்னப்பா செய்றீங்க, உங்க கடவுள் இங்கே பிச்சை எடுக்கிறார்)

வெள்ளையும் சொள்ளையுமாக வந்து உட்காரும் ஒரு தெனாவெட்டுப் பார்ட்டி சப்ளையரை  "வாடா, போடா" என அழைத்து வெயிட்டு காட்ட, ஒரு கட்டத்தில் சப்ளையர் எதிர்த்து பேச, நம்ம பார்ட்டி டேய் நான் யார் தெரியுமா,
"காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் க...." என்று சொல்லி முடிக்கும் முன் பொளேர் என அதன் மூஞ்சியில் ஒரு அறை விழுகிறது.  மூன்று சப்ளையர்கள் சேர்ந்து அந்த ஜந்துவை ரவுண்டு கட்டுகிறார்கள்.  மீண்டும் அது, "டேய்.. எம் மேலே கைய வெச்சுடீங்களா", என மீண்டும் அந்த சொலவடையை சொல்ல ஆரம்பித்து "காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் க...." என முடிக்கும் முன் அதேபோல் இன்னொரு அறை விழுகிறது.  பெரிய பெரிய ஜாம்பவான் இயக்குனர்கள் எல்லாம் சொல்லத் தயங்கிய விஷயங்களை கமலக் கண்ணன் இதுபோல் ஜஸ்ட் லைக் தட் காட்டி விட்டார்.



ஒரு சப்ளயைர் பையனுக்கும் பார் ஓனர் பெண்ணுக்கும் இடையே ஒரு காதலும் இடையிடையே ட்ராக்கில் ஓடுகிறது.  பாரிலுள்ள மூத்திர சந்துதான் இருவருக்குமான ரெகுலரான சந்திப்பு நிகழும் இடம் போல.  அந்தப் பெண்ணும் சரியான தேர்வு.  முத்தமிட்டு முடித்தவுடன் செல்வது போல் சென்று மனமில்லாமல் திரும்ப வந்து முத்தமிடுவது, யப்பா..!! சான்சே இல்லை.   திருமணத்திற்கு முன்பான காதலில் களவொழுக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயம் ஞாபகப் படுத்தும். 

பாக்கெட்டில் பத்து காசு இல்லாமல் பாருக்கு வருபவர்களின் சுக துக்காத்தில் பங்கு கொண்டு அவர்களை எண்ட்டர்டெயின் செய்து ஓசி குடி குடிக்கும் பெரியவர்,  மாணவர்கள் மூன்று பேர் ஒரு பியரை வாங்கி அதற்கு மிக்சிங் கோக் வாங்கலாமா என பேசிக் கொண்டிருப்பதை பார்த்து நேரே பாருக்கு வந்து அங்கு குடித்துக் கொண்டு இருக்கும் ஆசிரியரிடம்,
"""உங்க பேரே கேட்டுப் போச்சு சார், பசங்களுக்கு எப்படி குடிக்கறதுன்னு சொல்லித் தர மாட்டீங்களா" " எனக் கேட்க அதற்கு ஆசிரியர், "என்னது என் பசங்கள் குடிக்கிறாங்களா?" என அதிர்ச்சியைக் குடுக்க "அட விடுங்க சார், நீங்க குடிச்சிட்டுப் பாடம் நடத்தும் போது, அவங்க குடிச்சிட்டு படிக்க மாட்டாங்களா" என்று சொல்லி எழுந்து போய்க் கொண்டே இருப்பார்.

தன் மகள் சப்ளையரை முத்தமிடுவதை பார்த்து விட்ட பார் முதலாளி உணர்ச்சிவசப் படாமல் சென்று விட்டு அன்று இரவு ஆட்களை வைத்து அவனை அடிக்க ஏற்பாடு செய்ய, புரிந்து கொண்ட மற்ற சப்ளையர்கள் சேர்ந்து, அடிக்க வந்தவர்களை துவைத்து விட்டு திரும்பி பாருக்குள் வர, முதலாளி அதிர்ச்சியாக, அதில் ஒருவன் மட்டும் வந்து அவரை சமாதானம் செய்கிறான்.  இந்த காட்சி முழுவதும் ஒரே நிமிடத்தில் எந்த வசனமோ, சண்டையோ இல்லாமல் விஷுவலாக ஒவ்வொரு கேரக்டரின் பார்வையின் மூலமே நமக்குப் புரிய வைத்தது இயக்குனரின் திறமைக்கு மிகச் சிறந்த சான்று.

கோயமுத்தூர் வங்கியில் வேலை செய்வதாகவும், வந்த இடத்தில் பர்ஸ் தொலைந்துவிட்டது என ஆங்கிலத்தில் பேசி ஏமாற்றி காசு வாங்கி சரக்கடிக்கும் இளைஞன்,
காலையில் கடை திறக்கும் முன்பே வந்து திறக்க சில நிமிடங்கள் தாமதமாக அதைக் குறை சொல்லி ரூல்ஸ் பேசி முதல் ஆளாக சரக்கு வாங்கும் நபர்,
கட்சியின் மாவட்டச் செயலாளர் போலி சரக்கை அதிக அளவில் இறக்கச் சொல்லி பார் முதலாளிக்கு பிரஷர் கொடுப்பது,
காய்கறி அழுகியிருப்பதாக சமையல் ஆள் சொல்ல, அதற்கு பார் முதலாளி, "குடிகார நாய்ங்களுக்கு எதைக் கொடுத்தா என்ன?" என்பது,
சர்வ சாதரணமாக போலி சரக்கை விற்பது,
கூசாமல் போலிஸ் கான்ஸ்டபள் மாமூல் வாங்குவது,
இயந்திரத்தில் அடிபட்டு கட்டுப் போட்ட உடைந்த கையுடன் ஒரு தொழிலாளி மற்றும் அவர் உடன் பணியாற்றுபவர்கள் முதலாளித்துவம், ஏழ்மை, வேலை பற்றி பேசிக் கொள்வது,
எனப் பல நிகழ்வுகள் போகிற போக்கில் திரையில் வந்து போகின்றன. 

படத்தின் துவக்கத்தில் துப்புரவுப் பணியாளர்கள் இரண்டு பேர் குடித்துவிட்டு பணிக்குச் செல்கிறார்கள்.  படத்தின் இறுதியில் அவர்கள் பணி முடித்து மீண்டும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போ  நம்ம "காட்டை வித்துக் கள்ளு குடிச்சவர்களில்" ஒருவர் அந்த துப்புரவுப் பணியாளரை சாதி வேறுபாடு காட்டி கலாய்த்து விட பாதிக்கப் பட்டவர் வெகுண்டெழுந்து பாட்டிலை உடைத்து "நான் காட்டை வித்து கள்ளு குடிச்சவன் இல்லடா, ஒவ்வொரு நாளும் செத்துப் பொழைச்சவன், இவனுங்க பீ, மூத்திரத்த சொமக்க நாம்ப வேணும், கொஞ்சூண்டு தண்ணி கேட்ட தெனாவெட்டு மயிராப் பேசுவானா?  நீங்க எல்லாம் அப்பன் பாட்டன் சொத்துல குடிக்கிரவனுங்க, நான் என் வேதனைக்கு குடிக்கிறேன்.  சாராயமும் கள்ளும் எங்க குல சாமிடா,  கொஞ்சம் கொஞ்சமா எங்களை விட்டு போய்டுச்சு, இந்த கன்றாவியைத் தான் குடிக்க வேண்டியிருக்கு, உங்க நாத்தத்தை மறக்கத் தான்டா குடிக்க வர்றோம், இந்த இடத்திலும் குத்திக் காட்டுவீங்களா?" என்ற விளிம்புநிலை மனிதன் ஒருவனின் உணர்வோடு படம் முடிகிறது.


விடிந்தால் காந்திஜெயந்தி, இரவோடு இரவாக ஒரு ஜோடி ஊரை விட்டு ஓடுகிறது.

"பாலை" படத்திற்கு இசை அமைத்த வேத்சங்கர் தான் இப்படத்திற்கு பணியாற்றியிருக்கிறார்.  "சமரசம் உலாவும் இடமே" பாடல் தாளம் போட வைக்கிறது.  ஒத்தைக் கேமிராவை வைத்து வித்தை காண்பித்த ஒளிப் பதிவாளர் சுமீ பாஸ்கரனுக்குப் பாராட்டுக்கள்.   உலக சினிமாவுக்கான முதல் தகுதி  அப்படம் அந்நாட்டிற்குண்டான அல்லது கதைக்களம் நடைபெறும் பகுதிக்குண்டான நேட்டிவிட்டியுடன் இருக்க வேண்டும் என்பது.  அப்படிப் பார்த்தால் மதுபானக் கடை நிச்சயாமாக ஒரு உலக சினிமாதான்.  

டாஸ்மாக் பாருக்குச் சென்று குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும், டிவி சீரியலில் மூழ்கியிருக்கும் பெண்களுக்கும், அதன் உள்ளே என்னதான் நடக்கிறது என்ற ஆவல் உள்ளவர்களுக்கும் நிச்சயம் இத் திரைப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.  இப் புதிய முயற்சிக்காக இயக்குனர் கமலக் கண்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அன்புடன்

மலர்வண்ணன்

8 comments :

  1. நல்ல தெளிவான ஆழமான அலசர் சார்... தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றி திரு.மணிமாறன்

      Delete
  2. நல்ல விமர்சனம்.

    கூகிள் ஃபாலோயர் விட்ஜெட் போட்டு விட்டு, மற்ற திரட்டிகளிலும் தளத்தை இணையுங்கள். புது பதிவுகள் பற்றி அறிந்துகொள்ள உதவும். :)

    Indli.com, tamil10.com இவற்றையும் இணைத்துக்கொள்ளவும்.

    அப்படியே word verification தூக்கிடுங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஹாலிவுட் ரசிகன்...
      உங்கள் ஆலோசனைப்படி கூடிய விரைவில் மற்ற திரட்டிகளிலும் இணைத்துக் கொள்கிறேன்

      Delete
  3. மிக அழகான விமர்சனம்..
    அருமையாக எழுதுகிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி..

      Delete
  4. நான் படம் பார்க்கல.. உங்களோட விமர்சனத்தைப் பார்த்ததும் மறுபடியும் படம் பார்க்கத் தூண்டுது.. அருமை.!

    ReplyDelete
    Replies
    1. மிச்சம் மீதியிருக்கிற தியேட்டர்லயும் எடுக்குறதுக்குள்ள பாத்துட்டு வந்துடுங்க....

      Delete