Saturday 15 December 2012

அந்த மூன்று கதைகள்

சில மாதங்களுக்கு முன்பு ஒரு "ரம்"மிய மாலையில் நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.  பேச்சு பல தலைப்புகளைக் கடந்து சுவாரசியமாக போய்க் கொண்டிருந்தது.  நண்பர் என்னைவிட 14 வருடங்கள் வயதில் மூத்தவர்.  பல முன்னணி உலகளாவிய பயண ஏற்பாட்டாளர் (travel agent) நிறுவனங்களில் பணியாற்றியவர்.  பல நாடுகளை சுற்றியவர், இன்னும் சுற்றிக் கொண்டிருப்பவர்.  இடைப்பட்ட காலத்தில் நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரியும் போது உண்டாகிய நட்பு அது.

பேச்சினிடையே, இன்னொரு நண்பனைப் பற்றிய பேச்சு எழுந்தது.  அவனைப் பற்றி அவர் கேட்க, "சில வாரங்களுக்கு முன்புதான் கணவன் மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டனர்" என்று சொன்னேன்.  "நீங்க போகலியா?" என்று கேட்டார்.  "போகணுமா!" என்று நான் கேட்க, ஒரு சிரிப்புடன் வெயிட்டரிடம் "repeat" என்று சொல்லி நிமிர்ந்து உட்கார்ந்தார்.  சரி, பெரிசு "full"form க்கு தயாராயிட்டார் போல என நினைத்து "நிம்மதியா வேலை செய்து, கைநிறைய சம்பாதித்து, குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க எந்த நாடு சிறந்தது?" என்று கேட்டேன்.

"என் அனுபவத்தில் நான் கண்ட மூன்று நிகழ்வுகளை சொல்கிறேன், பிறகு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று சொல்ல ஆரம்பித்தார்.  இனி அனுபவங்கள் third person-ல்...

கனடா...!! அமெரிக்க கனவில் தோற்பவர்களின் அடுத்த இலக்கு.  ஒரு இந்திய பல் மருத்துவர், அவர் மனைவி மற்றும் மகளுடன் கனடாவில் 8 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.  தனி வில்லாவில் ஆளுக்கொரு காருடன் நல்ல வசதியான வாழ்க்கை.  வருடம் ஒரு முறை இந்தியா வருவார்கள்.  ஸ்டார் ஹோட்டலில் தங்கிக் கொண்டு பார்க்க விரும்புவர்களை கார் அனுப்பி கூட்டி வரச் செய்து கூடி மகிழ்வார்கள்.  'ஏன், வீட்டில் தங்க மாட்டார்களா?' எனக் கேட்கக்  கூடாது.  கொசுத்தொல்லை, பேப்பர் இல்லாத டாய்லெட், பெப்ஸி இல்லாத உணவு, வேலை சிபாரிசுகள், பெண் கேட்டு வரும் பெரிசுகள் போன்றவற்றை தவிர்க்கவே ஹோட்டல் வாசம்.

19-வது வயதில் இருந்த அவர்களின் ஒரே மகள் கனடாவில் உள்ள கல்லூரியில் Bio Chemistry படித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் மகளின் படிப்பு சம்பந்த ஒரு ப்ராஜெக்ட்டிற்கு, உடன் படிப்பவர்கள் மற்றும் புரொபசர்கள் உடன் 10 நாட்கள் கேம்ப்பிற்கு அனுப்பி வைக்கச் சொல்லி கல்லூரியிலிருந்து நமது பல் டாக்டருக்கு கடிதம் வர, மனைவியிடம் கலந்தாலோசித்து மகிழ்ச்சியுடன் மகளை அனுப்பி வைத்தனர்.  மகளுடன் தினமும் செல்போனில் அவள் தங்குமிடம், ப்ராஜெக்ட், உணவு, இத்யாதிகள் பற்றி தினமும் பேசினர்.  அவளும் போன வேலையை முடித்து திரும்பி வந்தாள்.

ஒரு மாதம் வழக்கம்போல் நன்றாக போய்க் கொண்டிருந்தது.  இரண்டாவது மாதத்தின் இறுதியில் மகளின் உடல்நலத்தில் மாற்றம் தெரியவே மருத்துவரை அணுகினர்.  சில  டெஸ்ட்டுகளுக்குப் பிறகு அவள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெளிவு படுத்தினார். தம்பதிகள் இருவரும் சில நொடிகளில் மனதளவில் இந்தியப் பெற்றோராக மாறினர், செயலளவில் மாற நினைத்தாலும் இயலாது. தூக்கி உள்ளே போட்டு விடுவார்கள்.  பெண்ணை வைக்கோல் போரில் போட்டு எரிக்கவோ, கும்பலாக ஊருக்குள் புகுந்து காலனியை எரிக்கவோ நினைத்தும் பார்க்க முடியாது.

பெண்ணை வீட்டில் உட்கார வைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.  "யாரடி அவன்?",
செல்ல மகள் சொன்னாள், "தெரியல"
அதிர்ந்தனர் பெற்றோர்.  பல வற்புறுத்தல்கள், கவுன்சலிங், தெரபிகளுக்குப் பிறகு அவள் சொன்னவற்றின் சாராம்சம் இது தான்.  ஒவ்வொரு நாள் இரவும் ஆண் பெண் பேதம் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக பார்ட்டி கொண்டாடுவர். பார்ட்டியின் உச்சகட்ட உறவுகளுக்கு boyfriend-girlfriend ஜோடியாக இருப்பவர்கள் தனியே தத்தம் அறைகளுக்கு சென்று விடுவார்கள்.  மீதமுள்ள singles தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒரே இரவில் ஒருவரிடமோ, ஒன்றுக்கு மேற்பட்டவரிடமோ, அல்லது கூட்டாகவோ உணர்சிகளை வடித்துள்ளனர்.  10 நாட்களும் தொடர்ந்து இதுபோல் Bio-Chemistry  ப்ராஜெக்ட் செய்து வந்துள்ளனர்.  நம்ம பெண் இதில் single வேறு.

புரொபஸர்களையும் ப்ரின்ஸிபாலையும் விட்டேனா பார் என்று பல் வைத்தியர் மனைவியுடன் கல்லூரியை நோக்கி புயலெனப் புறப்பட்டார்.  அனைவரையும் எதிரே உட்கார வைத்து நடந்தவற்றை விளக்கி சும்மா வெளுத்து வாங்கினார். 
அவரை மூச்சு வாங்க விட்டு பிரின்ஸிபால் பேச ஆரம்பித்தார், "உங்க பொண்ணுக்கு safe sex பத்தி நீங்க இதுவரை சொல்லித் தந்ததே இல்லியா" என்று கேட்க, நம்மாளு பெண்டாட்டியை மேலும் கீழும் பார்க்க, அம்மணி பக்கவாட்டில் தலையாட்டினார். 
"சரி அதாவது போகட்டும், கேம்ப் போற பொண்ணுக்கு நீங்க condom வாங்கிக் கொடுத்திருக்கலாமே,
ஏன் செய்யல?" என்று சொல்ல, நம் பல் வைத்தியருக்கு பல்லைத் தவிர மற்ற அனைத்தும் நடுங்கியது.
"அதெப்படி ஆண்-பெண்ண ஒன்னா நீங்க தங்க வைக்கலாம்" என்று நம்மாளு கேட்க அவரை வடிவேலு ரேஞ்சில் எல்லோரும் பார்த்தனர்.
"பதினெட்டு வயது நிரம்பியவர்களை கட்டுப் படுத்தும் உரிமை இந்த நாட்டில் யாருக்கும் கிடையாது" என்று அந்நாட்டு சட்டத்தை புரியவைத்து அவரை அனுப்பி வைத்தனர்.

அடுத்தது என்ன, கருக்கலைப்பு தான்.  மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.  அங்கேயும் சட்டம் தன் கடமையை செய்தது.  கனடாவில் மக்கள்தொகை குறைவாக இருப்பதால் தகுந்த காரணமற்ற கருக்கலைப்புகள் அங்கு தடை செய்யப் பட்டுள்ளது.
"அப்பன் பேர் தெரியாத புள்ளைய வெச்சு நாங்க என்ன செய்ய" என்று வைத்தியர் எகிற,
"don't worry sir, பெத்து எங்க கிட்ட குடுத்துடுங்க, தாய்-சேய் இருவரையும் நாங்க பாத்துக்கிறோம்" என்று சொல்லி அனுப்பி விட்டனர்.  அவரை கண்காணிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.  சில நாட்கள் பொறுத்து இந்தியா செல்ல முடிவு செய்தனர்.  ஒரு வழியாக இந்தியாவும் வந்து சேர்ந்தனர்.  முதன் முதலாக ஸ்டார் ஹோட்டலை தவிர்த்து ஸ்டார் ஹாஸ்பிடலுக்கு சென்றனர். மகளுக்கு மீண்டும் பல டெஸ்டுகளுக்குப் பிறகு கரு நன்கு வளர்ந்து விட்டதாகவும் இப்போது கலைப்பது பெரிய சிக்கலாகிவிடும் என்பதை டாக்டர்கள் தெரிவித்தனர்.  ஒரு package கொடுத்து விட்டால் காதும் காதும் வைத்த மாதிரி அவர்களே பிரசவம் பார்த்து நல்ல படியாக ஒப்பைடைத்து விடுவதாகவும் வலையை விரித்தனர். 

நம்மாளு யோசித்தார்.  லட்ச லட்சமா இவனுங்களுக்கு கொட்டிக் குடுத்து பிரசவம் பாத்தாலும், இது இந்தியா, நம்ம சாதி சனத்துல எவனுக்காவது தெரிஞ்சுடும்...  அதுனால கனடாவுக்கே போய் இலவசமாகவே இதை முடித்து விடுவோம் என்று குடும்பத்துடன் வண்டி ஏறினார். 
மகளுக்கு சுகப் பிரசவம் ஆனதா?  பேரனா, பேத்தியா? இந்தியாவிலுள்ள சொந்தங்களுக்கு அந்தத் தகவல் தெரிந்ததா? அவர்கள் மீண்டும் இந்தியா வந்தார்களா? மகளுக்கு திருமணம் ஆனதா? குஷ்பூ சொன்னது போன்ற கணவன் அப்பெணிற்கு அமைந்தானா? அப்போ அந்த குழந்தை? போன்ற கேள்விகளுக்குள் செல்லாமல்
அடுத்த கதைக்கு செல்வோம்...

ஆஸ்திரேலியா..!!
 பேரைக் கேட்டாலே கங்காருகளும், சிட்னி ஹார்பர் பாலமும், ஒபேரா மாளிகையும் கண் முன் வந்து போகும்.  நமது நண்பர் ஒரு வயது முதிர்ந்த ஆஸ்திரேலிய பெண்ணிற்கு, தான் சென்ற காரில் 500 மைல் தூரம் லிப்ட் கொடுக்க, அப்பெண் தன் வீட்டிற்கு வந்து ஏதாவது சாப்பிட்டு செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டு அழைத்து சென்றிருக்கிறார்.  நன்கு விசாலமான பண்ணை வீடு.  உள்ளே சென்றதும் 2, 4 மற்றும் 7 வயதுடைய பொடிப் பசங்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஒருவன் வெள்ளைக் காரனாகவும், ஒருவன் இந்தியனைப் போலவும், இன்னொருவன் ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தை சேர்ந்தவன் போலவும் இருந்தனர்.

சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அக் கிழவி, தன்னுடைய மருமகள் என்று ஒரு இந்தியப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.  நண்பர் மேலும் கீழும் பார்க்க அப்பெண் தொடர்ந்தார்.  கணவன் மனைவி சகிதம் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வேலைக்கு வந்தனர்.  முதல் குழந்தை பிறந்ததும், குழந்தையை யார் பார்த்துக் கொள்வது என்ற கருத்து வேறுபாட்டில் கணவன் விவாகரத்து செய்து விட்டு வேறு நாட்டுக்கே சென்று விட்டான்.  அதன் பிறகு வேலை பார்த்த இடத்தில் ஒரு ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவனுடன் ஏற்பட்ட காதலில் இரண்டாம் குழந்தை பிறந்தது.  பின் இருவரும் ஓரிரு வருடங்கள் ஒன்றாக இருந்துள்ளனர்.  700 மைல்களுக்கு அப்பால் அவனுக்கு ஓர் நல்ல வேலை கிடைக்க அவளையும் குழந்தைகளையும் அழைத்து செல்ல வேண்டும் என்ற ஆசை அவனக்கு, அவளோ மறுத்து விட்டாள்.  அவன் மட்டும் சென்று விட்டான்.

நாட்கள் ஓடின..சுற்றுலா வந்த ஒரு ஸ்பானிஷ்காரன் இவள் வீட்டருகில் கொஞ்ச நாள் வாடகைக்கு தங்கியிருக்கின்றான்.  நம் இந்தியப் பெண் பொழுது போகவில்லை என்று இவனுக்கு கைடு வேலை பார்த்திருக்கிறாள்.  பத்திக்கிச்சு... டூரிஸ்ட் விசாவில் மீண்டும் இருமுறை வந்து காதலை வளர்த்திருக்கிறான்.  கூடவே தன் வாரிசையும் வளர்த்து விட்டான். பிறகு போய் வருகிறேன் என்று போனவன் தான்.

மூணு பசங்களுக்கும் விளக்கம் கொடுத்தாச்சா?  அப்போ இந்த ஆஸ்திரேலிய மாமியார்?? 

மூத்த மகனின் பள்ளி முதல்வர் ஒரு விவாகரத்து பெற்ற ஆஸ்திரேலியன்.  பள்ளிக்கு சென்று வரும் போது அவரோடு பழக்கம் கொஞ்சம் நெருக்கமாகி, மீண்டும் காதலாகி கசிந்துருகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  அவரின் தாயார் தான் இந்த மாமியார்.  ஆனால் அவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார். விவாகரத்தும் அப்ளை செய்தாகி விட்டதாம்.  அவருடைய குழந்தையும் இப்போது இவர் வயிற்றில்.... ஆனால் மாமியார் இவரோடுதான் இருப்பேன் என்று இருந்து கொண்டார். பண்ணை வீடும் அவருடையது தான்.  மூன்று குழந்தைகளுக்கும் சேர்த்து அரசாங்கம் தான் சோறு போடுகிறது. இந்தியா, பெற்றோர், உடன்பிறந்தோர், சொந்தங்கள் என்று கேட்ட கேள்விக்கு அப்பெண், "நீ இங்கு வராதே, நாங்களும் அங்கு வர மாட்டோம் என்று சொல்லி விட்டனர் ******* ******" என்று அலட்சியமாக சொன்னார்.
ம்ஹூம்... அடுத்த கதைக்குப் போவோம்...


வளைகுடா என்றாலே எண்ணெய் கிணறுகளும், ஷேக்குகளும், ஒட்டகங்களும், பர்தாவுக்குள் தெரியும் கண்களும், துபாயும், ஷார்ஜாவும், பஹ்ரைனும், குவைத்தும், இன்னும் பலவும் நிழலாடும்.  சவூதி மேல் ஒரு இனம் புரியாத வெறுப்பும் படரும்.

1988-ல் இந்தியாவிலிருந்து நமது ஹீரோ குவைத்துக்கு வண்டி ஏறுகிறார்...
ஒரே ஒரு சூட்கேசுடன்...  அன்றிலிருந்து அவருக்கு ஏறுமுகம் தான்.  8 வருடங்கள் கடுமையான உழைப்பு... நல்ல வலுவான சேமிப்பு... தன் சொந்த ஊரே வியக்கும் அளவில் திருமணம்... திருமணம் முடிந்த கையேடு மனைவியுடன் மீண்டும் குவைத்... மீண்டும் கடின உழைப்பு... வருடங்கள் உருண்டோடின... இரண்டு குழந்தைகள்... தங்கத் தட்டும், பென்ஸும் வாழ்வின் அங்கமானது... ஒரே நிறுவனத்தில் 15 வருட அனுபவம், அதே கம்பெனிக்கு வெளிநாட்டிலிருந்து தேவையான பொருட்களை தருவித்துத் தரும் தொழிலை சொந்தமாக தொடங்கினார் நமது ஹீரோ... அவர் தொட்டதெல்லாம் துலங்கியது...

20 வருட குவைத் வாழ்வில் ஓர் இரவில் அந்த செய்தி அவருக்கு வருகிறது... உள்நாட்டு பிரசினைகள், கலவரங்கள், பொருளாதாரக் கொள்கை போன்ற ஏதோ காரணத்தால் அவருடைய தொழிலை அரசாங்கம் எடுத்துக் கொண்டது.  வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டன.  எந்நேரமும் அவர் கைது கூட செய்யப் படலாம் என்ற நிலை... இரவோடு இரவாக இந்தியாவிற்கு தன் குடும்பத்தினருடன் வண்டி ஏறுகிறார்... ஒரே ஒரு சூட்கேசுடன்...!!!

"நிம்மதியா வேலை செய்து, கைநிறைய சம்பாதித்து, குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க எந்த நாடு சிறந்தது?"  என்று நான் கேட்ட கேள்வியை rewind செய்து பார்த்தேன்.
நிம்மதியா வேலை செய்து - இது நம்ம கையில் தான் இருக்கு, இல்லன்னா வேற வேலை.. இதுதான் நம்ம பாலிசி...
கை நிறைய சம்பாதித்து - செலவுக்கு
த்த மாதிரி சம்பாதிக்கணும், இல்லன்னா சம்பாத்தியத்துக்கு ஏத்த மாதிரி செலவுகளை வெச்சுக்கணும்...
குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க - இப்போதைக்கு இந்தியா, அதுவும் தமிழ்நாடு தான்....

வெயிட்டரிடம் "repeat" என்றேன்...

- அன்புடன்
- மலர்வண்ணன்

Sunday 18 November 2012

Julia's Eyes (Spanish-2010) - சீரியல்(ஸ்) கில்லர்



ஈரானிய, கொரிய, ஆங்கில மொழிப் படங்களைப் போல் ஸ்பானிஷ் படங்கள் இருப்பதில்லை.  காரணம், ஸ்பானிஷ் திரைப்படங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட  நாடுகளில் இருந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.  மெக்ஸிகோ, பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் இருந்தும் வெளி வருவதால் ஒவ்வொரு படமும் ஒன்றுக்கொன்று துளி கூட சம்பந்தம் இல்லாமல் இருக்கும்.  Y Tu Mama Tambien (மெக்ஸிகோ), La Nina Santa(அர்ஜென்டினா), Miss Bala(மெக்ஸிகோ), Ameros Perros(மெக்ஸிகோ), Maria Full of Grace(கொலம்பியா), City of God(பிரேசில்), Central Station(பிரேசில்) என நான் பார்த்த வெகு சில ஸ்பானிஷ் படங்களின் மூலம் இதை தெரிந்து கொண்டேன்.

Art வகைத் திரைப் படங்கள் என்று நாம் வகைப்படுத்தக் கூடிய படங்கள் ஸ்பானிஷில் சொற்பமே.  எந்த நாட்டைச் சேர்ந்த ஸ்பானிஷ் படமாக இருந்தாலும் எடுத்துக் கொண்ட படத்தின் one line concept-ஐ விட்டு வெளியே செல்லாமல், விறுவிறுப்பு குறையாமல், திரைக்கதையில் விளையாடி நம்மை பரவசப்படுத்தும் படங்களாகவே இருக்கின்றன.   ரஷாமோன் வகை திரைக்கதை யுக்திக்கு இன்றுவரை  Ameros Perros மிகச்சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  (இந்த வகையில் மணிரத்னத்தின் "ஆய்த எழுத்து" தான் தமிழில் இதுவரை வந்த ஒரே படம்!!)

Los Ojos De Julia (ஸ்பெயின்), ஆங்கிலத்தில் Julia's Eyes, 2010-இல் வெளிவந்த ஒரு பக்கா ஸ்பானிஷ் த்ரில்லர். 

பிறவியிலேயே கண்பார்வை இல்லாமல் இருப்பது ஒரு வகை.  ஆனால் நன்றாக இருந்த பார்வை சிறிது சிறிதாக முற்றிலுமாக பறி போய் வெளிச்சத்தையும், வண்ணங்களையும் இழந்து ஆழ்ந்த இருட்டில், ஒலிக்கும் ஒவ்வொரு சத்தமும் குழப்பத்தையும், பயத்தையும் உருவாக்கி செத்துத் தொலையலாம் என்ற முடிவை எடுக்க தூண்டுகிறது.

படத்தின் Opening...

ஸாரா தன் கைகளால் துழாவிக் கொண்டு வீட்டின் கீழ்ப் பகுதிக்கு வருகிறாள்.  பார்வை பறி போன நிலை.  கைகளை விரித்துக்கொண்டே பயத்துடன் அங்குமிங்கும் அலைகிறாள். அவளது காலில் ஒரு ஸ்டூல் தட்டுப்படுகிறது .  அதில் ஏறி, கூரையிலிருந்து தொங்கும் ஒரு சுருக்குக் கயிறை தனது கழுத்தில் மாட்டிக்கொள்கிறாள்.  திடீரென அங்கே யாரோ இருப்பது அவளுக்குத் தெரிகிறது.

“இங்குதான் இருக்கிறாயா? உன் கண்முன் இறந்து, நான் துடிதுடித்துச் சாகப்போகும் இன்பத்தை உனக்குத் தரமாட்டேன். இங்கிருந்து போய்விடு”  என்று சொல்கிறாள்

பயத்திலும் பரபரப்பிலும் தனது கழுத்தில் இருக்கும் சுருக்கிலிருந்து வெளியேற முயற்சிக்கிறாள். அவளது கைகள் நடுங்குகின்றன.  திடீரென அவள் நின்றுகொண்டிருக்கும் ஸ்டூல் உதைக்கப் பட்டு ஒரு ஸ்டில் காமெராவின் பிளாஷ் வெளிச்சம் பளிச் பளிச்சென்று அறையெங்கும் தெறிக்கிறது. 

தொங்கிக் கொண்டே துடிக்க ஆரம்பிக்கிறாள் ஸாரா.

அதே நேரத்தில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் ஸாராவின் இரட்டைச் சகோதரியான ஜூலியா மயங்கி விழுகிறாள். 



படம் துவங்கிய பின் படுவேகமாக க்ளைமாக்ஸை நோக்கிப் பயணிக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மர்மம் இருக்கிறது.  த்ரில்லர் என்பதற்கு ஒரு உதாரணக் காட்சி:

கண் தெரியாத சில பெண்கள், குளியறையில் நின்று சாராவைப் பற்றி பேசி கொண்டிருகின்றனர்... அவர்கள் கவனிக்கா வண்ணம் அவர்களிடையே வந்து நிற்கும் ஜூலியா அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருக்கிறாள்.  திடீரென்று அவர்கள் தங்கள் அருகில் இன்னொரு நபர் இருப்பதை உணர்ந்து காற்றில் கைகளை வீசி ஜூலியாவை பிடித்து விடுகின்றனர், அதன் பின்னர் அவள் தன்னை யாரென்று அறிமுகம்  செய்து கொண்டு அவர்களுக்கு சமாதானம்  சொல்கையில், ஒருத்தி  கேட்கிறாள்  "சரி, இருக்கட்டும்... யாரவன்?" "எவனும் இங்கில்லையே" என ஜூலியா சொல்ல," அப் பெண், "உன்னுடன் இங்கு ஒரு ஆண் வந்திருக்கிறான்.. உனக்கு பின்னே தான் நிற்கிறான்.... யாரவன்?" எனக் கேட்கிறாள்.  ஜூலியா திரும்பிப் பார்க்க, ஒருவன் ஓடுகிறான்.


Degenerative eye disease என்னும் நோயால்  கொஞ்சம் கொஞ்சமாக பார்வை இழந்து  கொண்டே வரும் ஜூலியாவை கொலைகாரனும் பின் தொடர்கிறான்!  இதனிடையே  ஜூலியா தன் கணவனையும் தொலைத்து விடுகிறாள்.  பின்னர் எப்படி அந்த கொலைகாரனை கண்டு கொள்கிறாள், அவன் கண் தெரியாத சாராவையும், பின்னர்  ஜூலியாவையும்  துரத்தக் காரணமென்ன?  இறுதியில் ஜூலியா என்ன ஆகிறாள்? என்பதை  அவ்வளவு சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்.

இன்னொரு காட்சியில், ஆபரேஷனுக்குப் பின் கண்களில் கட்டுடன் ஜூலியா இரவில் படுத்திருக்கும் போது அந்நியனின் இருப்பை அறிந்து கொள்கிறாள்.  தன் உதவியாளரிடம் போனில் பேசிக் கொண்டே காலடிகளால் அளந்து வீட்டை விட்டு வெளியேறும் காட்சி பரபரவென்று இருக்கும்.  


படத்தின் முதல் காட்சியில் கண் தெரியாத சாரா கொலைகாரனிடம் பேசிக்கொண்டே தற்கொலை செய்து கொள்வதிலிருந்தே  நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். அதன் பின் ஜூலியா, சாரா சென்ற ஒவ்வொரு இடமாக சென்று விசாரிக்க தொடங்க, அவளை கொலைகாரனும் பின் தொடர்கிறான்.  விசாரணையில் சம்பத்தப் பட்ட மேலும் இருவர் கொல்லப்  படுகிறார்கள்.  (அவர்கள் யாரென்று சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் போய்விடும்). ஒரு கட்டத்தில் கண் பார்வை முற்றிலும் பறி போய், மாற்றுக்கண் பொருத்தப்பட்டு, ஆபரேஷன் செய்து கொண்டு, கண்களில் கட்டு போட்டுக்கொண்டு திரிகிறாள்.. அப்போது நடக்கும் காட்சிகள் தான் உச்சக்கட்டம்.

படத்தில் ஜூலியவிற்கு கண் பார்வை குறைந்து கொண்டே வருவதனால் அவள் பார்வை  வழியே  தெரியும் காட்சிகள் எல்லாம் அவளுக்குத் தெரிவது போலே நமக்கும் மங்கலாக காண்பிக்கப் படும்.  ஜூலியா பார்க்க முடியாமல் தடுமாறும் இடங்களில் நாமும் தடுமாறுவோம்.  ஒரு கட்டத்தில் ஜூலியாவிற்கு ஆபரேஷன் செய்து கண்களில் கட்டு போட்ட பின்பு அவளால் யார் முகத்தையும் பார்க்க முடியாததால் நமக்கும் யார் முகத்தையும் காட்ட மாட்டார்கள்.   கொலைகாரனை யூகிக்க முடிந்தாலும் அவன் முகத்தை நாம் பார்க்க முடியாது.

Guillem Morales இயக்கத்தில் Belén Rueda சாரா, ஜூலியா  இரு வேடங்களிலும் கலக்கியிருப்பார்.  The orphanage படத்தில் நடித்த வயதானவரா இவர் என்று வியக்க வைத்திருப்பார்.



கொட்டும் மழையில் ஜூலியா கயிறைப் பிடித்துக் கொண்டே தப்பிச் செல்லும் காட்சி, கொலையாளி ஜூலியாவிற்கு கண்பார்வை தெரிகிறதோ என சந்தேகித்து அவன் செய்யும் சோதனைகள், பக்கத்து வீட்டுப் பெண்ணின் முடிவு என பல காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும்.

படத்தில் என்னை மிகவும் கவர்ந்த காட்சிகளில் ஒன்று...



- அன்புடன்
- மலர்வண்ணன்

Sunday 4 November 2012

உலு(ரு)க்கும் பாடல்கள் - பாகம் 2



உலு(ரு)க்கும் பாடல்கள் முதல் பாகத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும் 

இப்பதிவில் இளையராஜா பாடிய சில உலு(ரு)க்கும் duet பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  இளையராஜாவைப் பற்றியோ அவர் இசையை சிலாகித்து எழுதுவதோ தேவையில்லா ஒன்று.  பல வருடங்களாக பலரும் பல விதங்களில் அதைச் செய்துவிட்ட படியால் புதிதாக அவர் இசை பற்றி நான் எழுதுவதற்கு ஒன்றுமில்லை. 

இணையத்திலோ, கடைகளிலோ இளையராஜா வாய்ஸ் ஹிட்ஸ் என்று தேடிப் பார்த்தீர்களானால் பெரும்பாலும் duet  பாடல்களில் நமக்குக் கிடைப்பது 

கடலோரக் கவிதைகளில் வரும் "அடி ஆத்தாடி இள மனசொன்னு",
தர்மபத்தினியில் வரும் "நான் தேடும் செவ்வந்திப் பூ", 
கீதாஞ்சலியில் வரும் "ஒரு ஜீவன் அழைத்தது", 
கரகாட்டக்காரனில் வரும் "இந்தமான் உந்தன் சொந்தமான்", 
நாடோடித் தென்றலில் வரும் "மணியே மணிக்குயிலே", 
தெய்வ வாக்கில் வரும் "வள்ளி வள்ளியென வந்தான்", 
பகல் நிலவில் வரும் "பூமாலையே தோள் சேரவா", 
அலைகள் ஓய்வதில்லையில் வரும் "காதல் ஓவியம் பாடும் காவியம்",
அவதாரத்தில் வரும் "தென்றல் வந்து தீண்டும் போது"

solo பாடல்களில் ராமராஜன், ராஜ்கிரண் படங்களில் இளையராஜா பாடிய தத்துவப் பாடல்கள் மற்றும்  தாயைப் பற்றிய சென்டிமென்ட் பாடல்களுடன் 

நாயகனில் வரும் "தென்பாண்டி சீமையிலே"
சின்னக் கவுண்டரில் வரும் "கண்ணுப் படப் போகுதய்யா"
பணக்காரனில் வரும் "உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி" (ராஜா பாடியதில் எனக்குத் துளியும் பிடிக்காத பாடல்)
இதயம் படத்தில் வரும் "ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே"

போன்ற பாடல்களே மிகுந்து காணப்படும்.  எப்.எம்.இலும், டிவி சானல்களிலும் மேற்கண்ட பாடல்களே பெரும்பாலும் ஒலி/ஒளி பரப்பப் படுகிறது.  ராஜாவும் தான் நடத்தும் கச்சேரிகளில் தானே பாடும் போது இப்பாடல்களிலிருந்தே தேர்வு செய்து பாடுகிறார்.  அவர் பாடிய duet பாடல்களில் நாம் அதிகம் miss செய்த அருமையான பாடல்களில் சிலவற்றை  இங்கே தருகிறேன்.
Over To இளைய(சைய)ராஜா....

Feel Good Movies என திரைப்படங்களில் சிலவற்றை விமர்சகர்கள் தரம் பிரிப்பார்கள்.  இவ்வகை திரைப் படங்கள்  தமிழில் எப்போதாவது அபூர்வமாக வருவதுண்டு.  தயாரிப்பாளர்களும் பெரும்பான்மையான ரசிகர்களும் இவ்வகைப் படங்களை வரவேற்காதபடியால் தமிழில் இந்த genre குறைவே.  மகேந்திரன், ராதாமோகன், வி.ப்ரியா, வசந்த் போன்ற ஒரு சிலரின் வரிசையில் இயக்குனர் அகத்தியனையும் எடுத்துக் கொள்ளலாம். காதல்கோட்டை, விடுகதை படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கிய படம் 1998-இல் வெளிவந்த "காதல் கவிதை".  பாராக் காதலையும், இளமைVsமுதுமைக்குமான காதலையும் தனது முதல் இரு படங்களில் வழங்கியவர்  இப்படத்தில் முதன்முறையாக  இளையராஜாவுடன் இணைந்து கவிதைகளால் கவரப் படும் காதலைப் பற்றி எடுத்திருப்பார்.  ஆனால் படம் என்னவோ ஊத்திக் கொண்டது.

இப்படத்தின் டைட்டில் பாடலான "ஹே... கொஞ்சிப் பேசு கோபம் கொண்ட கண்ணம்மா" என்ற பாடலை இளையராஜாவும் சுஜாதாவும் பாடியிருப்பார்கள்.  பாடலுக்கேற்றாற்போல் இருவரும் கொஞ்சிக் கொஞ்சி பாடியிருப்பார்கள்.  முதல் சரணத்தில் "ஹேய்... நீரே மறைக்குற  நீரே..." என சுஜாதா  ஆரம்பிப்பது அசத்தலாக இருக்கும்.  படத்தின் டைட்டிலில் இசை: "இசைப் பிதா" இளையராஜா என காட்டியிருப்பார்கள்.  இப்படத்தில் இஷா கோபிகர் அறிமுகம், பிரசாந்த் இறங்குமுகம்.


1994-இல் R.K.செல்வமணியின் மொக்கை இயக்கத்தில் பிரசாந்த் & மோகினி நடிப்பில் வெளிவந்த படு பயங்கர flop ஆன படம் கண்மணி.  "உடல் தழுவ தழுவ", "ஓ என் தேவ தேவியே", "ஆசை இதயம் எழுதும் கடிதம்" போன்ற கலக்கல் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம்.  

இப்படத்தில் "நேற்று வந்த காற்று உன் பாட்டை கொண்டு வந்து தந்ததா" என்ற பாடலை ராஜாவும் ஜானகியும் பாடியிருப்பார்கள்.  ஒரு அழகான "PEP" பாடலுக்கு சரியான உதாரணம் இப்பாடல் தான்.  படத்திற்கு இசை இளையராஜா என்றாலும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் கார்த்திக்ராஜா என்று கேள்விப் பட்டேன். இதே மெட்டை கார்த்திக்ராஜா தான் இசையமைத்த "Grahan" என்ற இந்திப் படத்திலும் உபயோகப் படுத்தியிருப்பார்.


1995-இல் BR விஜயலட்சுமி இயக்கத்தில் SPB, ரகுமான், லாவண்யா நடிப்பில் வெளிவந்த படம் "பாட்டு பாடவா".  பெரிய ஹீரோக்களோ, இயக்குனரோ இல்லாத படமாயிருந்தும் சுமாராக ஓடி குறிப்பிட்ட வசூலைப் பெற்றது. படத்தில் கொடுமை என்னன்னா நம்ம SPB மனநலம் குன்றியவரா நடிச்சிருப்பார், ஆனா பாட்டு மட்டும் நல்லா பாடுவார், நம்ம சின்னத்தம்பி மாதிரி.  "சின்ன கன்னனுக்குள்ளே வந்த செல்ல""", "வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்"", கோரஸ் பாடுறகோஷ்டி நிக்குது"", "பூங்காற்றிலே சாலையோரம் பூ பூத்ததே" போன்ற மனதை மயக்கும் பாடல்களால் நிரம்பிய படம்.

"வழிவிடு வழிவிடு" பாடல் SPBயும் இளையராஜாவும் பாடிய duet. (இருவர் சேர்ந்து பாடினாலே அது duet தாங்க!!).  படத்தின் இன்னொரு டூயட் இளையராஜாவும் உமாரமணனும் பாடிய "நில்..நில்.. நில்.. பதில் சொல்..சொல்..சொல்.." என்ற slow rock வகையைச் சேர்ந்த பாடல்.  பாடலின் முதல் சரணத்தில் "தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மணம் வேண்டிடாதோ, நூல் கூட இடை நுழையாமல் எனைச் சேர்ந்திடாதோ"" என்ற வரிகளினூடே புல்லாங்குழலும் சேர்ந்து பாடும் ஒரு வித்தையை ராஜாவினன்றி யாரறிவார்!!


தமிழ்ப் படங்களில் அவ்வப்போது ஒரு trend வருவதுண்டு.  அதில் ஒன்று, புதுமுகங்களை வைத்து வித்தியாசமான காதல் கதையைத் தருகிறேன் என்ற பேரில் கண்ட கருமத்தைத் தருவது.  அப்படி வந்த காலத்தால் அழிந்து போன படைப்புகளில் ஒன்றுதான் சுந்தர் K விஜயன் என்பவரின்  இயக்கத்தில் குரு-பிரியங்கா என்ற புதுமுகங்களின் நடிப்பில்(!!) 1991-இல் வெளிவந்து, வந்த வேகத்தில் காணாமல் போன "என்னருகில் நீ இருந்தால்" என்ற காதல் காவியம்.

சும்மா சொல்லக் கூடாது, இப்படத்திற்கான  பாடல்களை இளையராஜா பிரித்து மேய்ந்திருப்பார்.  குறிப்பாக "ஓ.. உன்னாலே நான் பெண்ணாநேனே" பாடல் இன்றும் எனது one of the favorite melody.  படத்தில் ராஜாவும் ஜானகியும் பாடிய melody "இந்திர சுந்தரியே சொந்தம் என்று சொல்ல வா..."  ஜானகிக்கு கொஞ்சிப் பாட சொல்லியா தர வேண்டும்!?  பல்லவியின் முதல் வரி முடிந்ததும் "ஓ..ஹோ..ஓ..ஹோ..ஓ..ஹோ.." என்பதுதான் இப்பாடலின் சிறப்பம்சம்.


ஹீரோக்கள் எல்லாம் ஆளாளுக்கு பொம்பள வேஷம்  கட்டுறாங்க.. நானும் கட்டுறேன் என்று நம்ம பிரசாந்த் காட்டுன... ச்சே!! கட்டுன படம்,  அவங்கப்பா தியாகராஜன் இயக்கத்தில் 1995-இல் வெளிவந்த "ஆணழகன்". (வேஷம் கட்டாமலேயே பிரசாந்த் பாக்க "அப்படி"த்தான் இருப்பாருன்றது வேற விஷயம்..)  படம் நெடுக non stop காமெடியை சும்மா அள்ளி இறைத்திருப்பார்கள்.

இதில் மறைந்த ஸ்வர்ணலதாவும் இளையராஜாவும் இணைந்து பாடிய பாடல் "நில்லாத வெண்ணிலா நில்லு..நில்லு.. என் காதலி".  இப்பாடலில்  ராஜா பாடும் வரிகள் தமிழிலும் ஸ்வர்ணலதா பாடும் வரிகள் மலையாளத்திலும் இருக்கும்.  இந்தப் பதிவிலேயே இதைத் தான் the best song எனலாம். முதல்முறை கேட்கும் போது மிகச் சாதாரணமாகத் தோன்றும் இப்பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் போது நம்மை அல்லேக்காக உள்ளிழுத்துக் கொள்(ல்லு)ளும்.  (ஆணழகனை மீண்டும் மீண்டும் காட்ட வேண்டாம் எனக் கருதி audio clip மட்டும் இப்பாடலுக்கு இணைக்கப் பட்டுள்ளது)


மேலே உள்ள அனைத்துப் பாடல்களும் 90-களில் வெளிவந்தவை.  என்பதுகளில் தான் இளையராஜா தன்னுடைய best ஐக் கொடுத்தார் என பலர் சொல்வது சரியானதன்று.  அக்னி நட்சத்திரம், அஞ்சலி படப் பாடல்கள் இப்போதைய trend க்கு ஏற்ப அன்றே இசைக்கப் பட்டவை.  இன்று கேட்டாலும் புதிதாகக் கேட்பது போல் இருக்கும்.  

80-களில் வெளிவந்த அருமையான ராஜாவின் duet-கள் பற்றி இன்னும் இரண்டு பதிவுகள் போடலாம்.  அதில் சில பாடல்கள் மட்டும்  உங்களுக்காக கீழே தொகுக்கப் பட்டுள்ளன. 

பாடல்: "பொன்னோவியம் கண்டேனம்மா பேரின்பம்"""
படம்: கழுகு (1981)
இணைந்து பாடியவர்: ஜானகி
 



பாடல்: "மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட"
படம்: மெட்டி (1982)
இணைந்து பாடியவர்: ஜானகி


பாடல்: "மலரே பேசு மௌன மொழி"
படம்: கீதாஞ்சலி
இணைந்து பாடியவர்: சித்ரா



பாடல்: "சின்னபொண்ணு சேலை"
படம்: மலையூர் மம்பட்டியான் 
இணைந்து பாடியவர்: ஜானகி




பாடல்: "சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும்"
படம்: கல்லுக்குள் ஈரம்
இணைந்து பாடியவர்: ஜானகி



- அன்புடன்
- மலர்வண்ணன் 



Wednesday 24 October 2012

Unfaithful - (18+) விமர்சனமல்ல.. வியப்பு !!



இருபதுகளில் திருமணம் செய்து இனிக்க இனிக்க இன்பமாக இருந்து, முப்பதுகளில் குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் இருந்தாலும் ஊடல் கூடல் என்ற தண்டவாளத்தில் நிறைகுறைகளுடன் சென்று நாற்பதை தாண்டி செல்லும் போது தம்பதிகளுக்குள் ஓர் அசாதாரண வெறுமை அல்லது வெற்றிடம் போன்று ஒன்று வரும்.  வாய்த்திருக்கும் அனைத்தும் பற்றாக் குறையாகவே தோன்றும்.  பக்திநிலை, முக்திநிலை, சித்திநிலை, மோனநிலை என பல நிலைகளை கடந்து வந்திருந்தாலும் இந்த நாற்பதிலிருந்து நாற்பத்தேழு வரை உள்ள ஏழரை நிலையைக் கடந்து செல்வது நிச்சயம் ஆய கலைகளுள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. 

இந்த தருணத்தில் கணவனும் மனைவியும் தங்களது காதலை கட்டாயம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.  "கிடப்பது கிடக்கட்டும், கிழவிய தூக்கி மனையில வை" என்பது போல தொழில், போட்டி, வாய்ப்புகள், வேலை, உறவினர், வெற்றி, தோல்வி, ஈகோ, லட்சியம், போன்ற அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு பொறுப்பாக காதலை முதலிலிருந்து துவக்க வேண்டும்.  இருபது வருடங்களுக்கு முன்பிருந்ததுபோல வேகம் இருக்காதுதான் .  ஆனால் இப்போது இருவரும் நினைக்க, பேச, சுற்ற, வருட, குழைய, வாதிட, மேலிட, மேவிட நிறைய இருக்கும்.  இவையனைத்தையும் காதலினூடே கலந்து விட்டால் கரைந்து போனவர்கள் பின் மீள முடியாது.

Extra Marital Affair என்பது தமிழ்ப் படங்களில் அவ்வப்போது வருவதுண்டு.  பெரும்பாலும் பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்றோர் படங்களில் இதைக் காணலாம்.   பெண்களை உயர்வாகக் காட்டுகிறேன் பேர்வழி என்பதற்காகவோ, பெண்கள் கூட்டம் திரையரங்கில் குறைந்து விடுமோ என்ற நினைப்பிலோ, மாதர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கிவிடுமோ என்ற பயத்திலோ நம் தமிழ்ப்படங்களில் இந்த Extra Marital Affair-ல் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்.  சம்பத்தப்பட்ட ஆண், கதாநாயகனின் அப்பாவாகவோ, அக்கா புருசனாகவோ இருப்பார், இறுதியில் திருந்தி அந்த உறவை முறித்துக் கொள்வார்... அவரின் ஆசை நாயகி வில்லியாகவோ, ஒழுக்கம் கெட்டவராகவோ சித்தரிக்கப் படுவார் (ஒருவேளை ஆணாதிக்கமோ!!)

2002-ல் Richard Gere,  Diane Lane,  Olivier Martinez இவர்கள் நடிப்பில் Adrian Lyne இயக்கத்தில் வெளிவந்த அமெரிக்க திரைப்படம் "Unfaithful ".

கான்னியும் (Diane Lane) எட்வர்ட் சம்மரும் (Richard Gere) தங்களது நாற்பதுகளில் இருக்கும் நியூயார்க்கின் புறநகரில் எட்டு வயது மகனுடன் இருக்கும் தம்பதியினர்.  முழுமையும் புரிதலும் இருவருக்குள்ளும் நிரம்பி இருந்தாலும், வயதின் காரணமாக அவர்களுக்கிடையேயான சொல்லென்னா உணர்வுகள் முற்றிலுமாக வெளிப் படுத்தப் படாமல் வேலையிலும், குழந்தை வளர்ப்பிலும், சமூக சேவையிலும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குளுமையான நாளில் மன்ஹட்டனில்  தன் மகன் சார்லியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பொருட்களை சுமந்து கொண்டு வரும் வழியில் கான்னி ஒரு மிதமான சுழலில் சிக்கிக் கொண்டு டாக்சி கிடைக்காமல் அல்லாடுகிறாள்.  Windstorm-ன் வேகமும் பொருட்களின் பாரமும் சேர்ந்து கான்னியை நிலைகுலையச் செய்கிறது.  அவ்வழியே புத்தகங்களைச் சுமந்து கொண்டு தடுமாறி வந்து கொண்டிருக்கும் பால் மார்டல் (Olivier Martinez) மீது மோதி இருவரும் கீழே விழுகின்றனர்.  கான்னியின் முட்டியில் அடிபட்டு ரத்தம் வழிகிறது.  பிரெஞ்சு மொழியில் புலம்பிக் கொண்டே சிதறிய புத்தகங்களையும், கான்னியின் பொருட்களையும் பால் கொண்டு வந்து தருகிறான்.

கான்னியின் காலில் அடிபட்டிருப்பதைக் கண்ட மார்டல் அருகே உள்ள தான் தங்கியிருக்கும் வீட்டைக் காட்டி அங்கு வந்து முதலுதவி செய்து கொண்டு நிதானமாகப் போகலாம் என்று சொல்ல கான்னியும் சம்மதித்துச் செல்கிறாள்.  மூன்றாம் அடுக்கில் உள்ள நூலகம் போலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்கும் மார்டல் தன்னை இருபத்தெட்டு வயதுடைய பிரெஞ்சு எனவும், அரிய புத்தகங்களை தேடியலைந்து கண்டுபிடித்து அதை விற்கும் பணியினை செய்து வருவதாகவும் சொல்கிறான்.  கான்னி குளியலறைக்குச் சென்று தன் காயங்களை சுத்தம் செய்து கொண்டு கிளம்புவதாகச் சொல்ல, மார்டல் அவளுக்கு காபி தரும் வரை காத்திருக்கச் செய்ய, கான்னி தான் அங்கிருப்பதை சங்கடமாக உணர்ந்து வெளியே செல்ல முற்பட, அவளை அங்கிருக்கும் குறிப்பிட்ட புத்தகம் ஒன்றை எடுக்கச் சொல்லி படிக்கச் சொல்கிறான்.  உமர் கயாம்மின் கவிதைப் புத்தகம் அது.  அது மேலும் அவளைச் சங்கடமாக்கி கிளம்ப எத்தனிக்க, புத்தகத்தை அவளிடமே கொடுத்தனுப்புகிறான்.

நடந்த நிகழ்வை அன்றிரவு கான்னி, எட்வர்டிடம் சொல்கிறாள்.  எட்வர்ட் சிறு புன்னகையுடன் ""அவன் அழகானவனா, அவனுக்கு ஒரு வைன் பாட்டில் வாங்கி கொடுத்து விடு"" என போகிற போக்கில் நகைச்சுவைக்காக சொல்லி விட்டுச் செல்கிறார்.  மறுநாள் உமர் கயாமின் கவிதைகளை அவள் எடுத்து வாசிக்க மார்டலின் ஞாபகம் அவளுக்குள் வந்து செல்கிறது.  எட்வர்ட் சொன்னதுபோல் அவனுக்கு ஒரு வைன் பாட்டிலை வாங்கிக் கொண்டுத்து நன்றி சொல்லி பார்த்துவிட்டு வந்தால் என்ன என அவளுக்குத்  தோன்றுகிறது.  ரயில் நிலையத்திலிருந்து அவனுக்கு போன் செய்கிறாள்.

போன் செய்கிறாள் என அந்த ஒரு சீனை சர்வ சாதரணமாக சொல்ல முடியாது.  இந்த இடத்திலிருந்து இப்படத்தை Diane Lane, soloவாகத் தூக்கிச் செல்கிறார்.  தன்னைவிட சிறுவயதுப் பையனிடம் என்னவென்று பேசுவது, அவன் என்ன நினைப்பானோ என்ற நினைப்பு ஒருபுறம்... அவன் மேல் உள்ள இனந்தெரியாத ஈர்ப்பு ஒருபுறம்... கையில் நாணயத்தை வைத்துக் கொண்டு டெலிபோன் பெட்டியில் போடுவதும், யோசிப்பதும், பின் எடுப்பதும், இதை ஒரு ரிலே போல் திரும்பத் திரும்ப செய்யும் போது அவர் காட்டும் முகபாவனைகள்... அப்பப்பா... எத்தனை டேக்குகள் வாங்கினார் என்று தெரியவில்லை.  ஆனால் அசத்தல்...




அவனுக்கு  போன்  செய்கிறாள்.  அவன் வீட்டில் சென்று அவனை சந்திக்கிறாள்.  காபி...  அவள் கண்களை மூடச் செய்து ப்ரெயிலி முறையில் அவள் விரல்களைப் பற்றி ஒரு கவிதையை வாசித்துக் காட்டுகிறான்.  உணர்ச்சி மேலிட அவள் அவனை விடுத்து பட்டென்று வெளியேறி விடுகிறாள்.  குற்றவுணர்வு தூண்ட கணவனுக்கு ஒரு ஸ்வெட்டரை வாங்கிக் கொண்டு அவன் அலுவலகம் சென்று அணிவிக்கிறாள்.  இருவரும் அனைத்துக் கொள்கின்றனர்.  மறுநாள் மீண்டும் இளைஞனை சந்திக்கிறாள்.  இம்முறை இருவரும் நடனமாடுகிறார்கள்.  பாடல் இடையில் நின்றுவிட ""இது தவறு" என அவனிடம் சொல்லி வெளியேறுகிறாள்.   சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வருகிறாள்.  "என்னுடைய ஓவர்கோட்டை மறந்து விட்டேன்"  என சொல்லி அதை எடுக்கச் செல்கிறாள்.  அவன் அவளை அப்படியே அனைத்து தூக்கிச் செல்கிறான்.  

கட்...
அடுத்த காட்சி கான்னி ட்ரெயினில் செல்கிறாள்.  காலை மடக்கி உட்கார்ந்திருக்க அவள் கால்களில் அன்று அடிபட்ட காயம் தெரிகிறது.  அவள் முகத்தில் அழுகை, கோபம், மகிழ்ச்சி, நிறைவு, குற்றவுணர்வு, குழந்தைத்தனம் அனைத்தும் ஒரு கலவை போல வந்து வந்து செல்கிறது.  ஒருவரால் இப்படிக் கூட நடிக்க முடியுமா என்று வியந்து கொண்டிருக்கும் போதே சற்று முன்பு நடந்த நிகழ்வுகள் அவள் கண்முன் வந்து போவது போல் பார்வையாளனுக்கு காண்பிக்கப் படுகிறது. மார்டல், கான்னியை அலேக்காகத் தூக்கிச் சென்று கட்டிலில் போடுகிறான்.  அவள் உடைகளைக் களைகிறான்.  அவளுக்கு வேண்டும் போலவும் இருக்கிறது, பயமும் குற்றவுணர்வும் தடுக்கிறது.  அதீத காமத்தாலும் பயத்தாலும் அவள் உடல் உதறுவது ஏதோ அந்த இடத்தில் நாமே இருப்பதுபோல் நமக்குத் தோன்றுவதை தடுக்க இயலாது.  "Body language-Body language" என்று சிலாகித்து கூக்குரலிடுபவர்கள்  Diane Lane இந்த சீனில் காட்டுவதைப் பார்க்க வேண்டும்...  அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடங்க வெகுநேரம் ஆகும்.  எனக்கு சில நாட்கள் ஆனது...

இதன் பின் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு பக்கா த்ரில்லர் படத்துக்குரிய வேகத்துடன் செல்கிறது.  கான்னி - மார்டல் சந்திப்பு தினமும் தொடர்கிறது.  எட்வர்டுக்கு சந்தேகம் வலுக்கிறது.  தன் டிடெக்டிவ் நண்பனை துப்பறியச் சொல்கிறார்.  அவர் போட்டோக்களுடன் நிரூபிக்கிறார் (இதைப் பார்த்து உங்களுக்கு "திருட்டுப் பயலே" படம் ஞாபகம் வந்து தொலைத்தால் நான் பொறுப்பல்ல).  எட்வர்ட், மார்டலின் வீட்டுக்குச் செல்கிறார்.  இருவரும் வோட்கா அருந்துகின்றனர்.  கலைந்து கிடக்கும் அவனது கட்டிலை வெறுப்புடன் எட்வர்ட் நோக்குகிறார்.  அருகில் ஒரு "snow globe", அது.... எட்வர்ட், சில வருடங்களுக்கு முன் கான்னிக்கு கொடுத்த பரிசு..!!  அதைக் கையில் எடுத்து மார்டலின் மண்டையில் அடிக்க அது அவனுக்கு மரண அடியாக விழுகிறது.

மார்டலின் உடலை எட்வர்ட் அப்புறப் படுத்த முயலும் போது அவனுக்கு ஒரு போன் வருகிறது...  யாரும் எடுக்காமல் போகவே வாய்ஸ் மெயிலில் கான்னியின் குரல் ஒலிக்க ஆரம்பிக்கிறது ...

இதன்பின் வரும் சம்பவங்களையும் திருப்பங்களையும் படத்தின் முடிவையும் எழுதிவிட்டால் படம் பார்க்கும் போது ஏற்படும் சுவாரசியம் பார்ப்பவர்களுக்கு குறைந்துவிடும் என்பதால் இத்துடன் படத்தின் கதையை பற்றி அலசுவதை நிறுத்திவிடுவோம்.  Indecent Proposal, Fatal Attraction போன்ற படங்களின் வரிசையில் வரும் படம் அல்ல இது.  த்ரில்லர் மட்டுமே concept என்றில்லாமல் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்து அதை நாயகியின் உடல் மொழியின் மூலம் ஒரு கவிதையாகக் காண்பித்த அற்புதமான தவற விடக் கூடாத படைப்பு இது...


- அன்புடன்
- மலர்வண்ணன் 




Sunday 9 September 2012

காதலை மீறிய காதல்கள்



காதலைப் பற்றி உருகுவதோ, காதலின் புனிதம்(!) பற்றியோ, என் காதல் அனுபவங்களோ இப்பதிவின் நோக்கம் இல்லை.  2004 -இல் வந்த "காதல்" திரைப் படத்தை பெரும்பாலோனோர் பார்த்திருக்கலாம்.  நான் தொடர்ந்து மூன்று நாட்கள் மாலைக் காட்சி சென்று பார்த்தேன்.  முதல் நாள் தாம்பரம் வித்யா, அடுத்த நாள் டிரைவ் இன் பிரார்த்தனா, மூன்றாம் நாள் தேவி.  "இப்படம் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்டது" என பட வெற்றிக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் பேட்டியில் சொன்னார்.  நான் இங்கே எழுதப் போவதும் நான் சந்தித்த "காதல்" திரைப் படத்திற்கு சமமாகவோ அல்லது அதைவிட தீவிரமான காதலர்களைப் பற்றியது...(அப்பாடா, ஒரு வழியாக பதிவின் தலைப்பிற்கு விளக்கம் கொடுத்தாயிற்று).  படித்து, பிடித்து இதை ஹாலிவுட்டிலோ, கோலிவுட்டிலோ, பாலிவுட்டிலோ திரைக் காவியமாக்கும் எண்ணம் உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தயங்காமல் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

சென்னையின் கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு சேலத்தில் ஒரு கடையை போட்டு பொழுதை ஒட்டிக் கொண்டிருந்த தருணத்தில் எனக்குண்டான பல ரெகுலர் காஸ்டமர்களில் ஒருவர் நாளடைவிலான பழக்கத்தினால் சற்று நெருக்கமானார்.  அவர் ஒரு எஞ்சினியர், பெயர் வேண்டாம், எஞ்சினியர் என்றே வைத்துக் கொள்வோம்.  அவர் மனைவி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை.  என்ஜினியருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி, இவர் மட்டும் அப்பா, அம்மா, மனைவி சகிதம் கூட்டுக் குடும்பமாக இருந்தார்.  ஒரு நாள் சகஜமாக பேசிக் கொண்டிருந்த பொழுது நான், "என்ன சார், ஸ்கூல் லீவுல டீச்சர் அவங்க அம்மா வீட்டுக்கு போகலியா?" என்று நான் கேட்க எஞ்சினியர் தன் காதல் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

சேலத்தை அடுத்த திருச்செங்கோட்டில் நமது எஞ்சினியர் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி சகிதம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுதே பக்கத்து வீட்டில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த டீச்சர் மீது ரூட் விட ஆரம்பித்து விட்டார்.  டீச்சரின் குடும்பத்தாரும் எஞ்சினியர் குடும்பத்துடன் நன்கு அன்யோன்யமாக பழகி வந்துள்ளனர்.  கணக்கு பாடத்தில் டீச்சருக்கு சந்தேகம் வரும் போதெல்லாம் நம்ம எஞ்சினியர் தான் தீர்த்து வைப்பார்.  அப்போ டீச்சர் பத்தாவது, எஞ்சினியர் +2 .  டீச்சரும் "அண்ணா அண்ணா" என்றே என்ஜினியரை விளிக்க இரு வீட்டாரும் கண்டுகொள்ளாமல் விட்டனர்.


பொதுத் தேர்வு முடிந்து விடுமுறையில் கணக்கு சொல்லித்தர வாய்பில்லா நிலையில் எஞ்சினியர் கணக்கு பண்ணத் துவங்கி அதை டீச்சரிடம் சொல்லியும் விட்டார்.  வழமையான  எல்லா இளம்பெண்களைப் போல டீச்சர் ஆரம்பத்தில் பிகு பண்ணி பாராமல், பேசாமல், கொள்ளாமல் இருந்து விட்டார்.  ஒரு வருடமாக தினமும் அனுபவித்த எஞ்சினியரின் லேசான ஸ்பரிசங்களும், அருகாமையும், ஆண் வாசனையும் திடீரென்று காணாமல் போனதில் டீச்சர் பாவம் தவித்துத்தான் போய்விட்டார்.  நம்ம என்ஜினியரும் விடாமல் துரத்தி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்வையாலே பதிலுக்கு ஏங்குவது, சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு எங்கோ வெறிப்பது, இரவானால் மொட்டை மாடிக்கு சென்று குடல் வெளியே வருமளவிற்கு இருமி இருமி சிக்னல் கொடுப்பது என்று தனக்குத் தெரிந்த எல்லா வழியிலும் முயற்சி செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரே நேரத்தில் எஞ்சினியரிங் காலேஜ் சீட்டையும், டீச்சரின் காதலையும் பெற்று விட்டார்.

கோயம்புத்தூர் காலேஜில் சேர்ந்ததிலிருந்து எஞ்சினியர் வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டுக்கு வர முடிந்தது.  அவர் வருவதே டீச்சரைப் பாக்கத்தான்.  ஐந்து வருடங்கள் கடந்து சென்று விட, இருவரும் ஓருயிர் ஈருடல் ரேஞ்சிற்கு ஆகிவிட்டிருந்தனர்.  எஞ்சினியர் கேரளாவின் கொச்சியில் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து விட்டிருந்தார்.  டீச்சரும் டிகிரி முடித்து விட்டிருக்க அவர் வீட்டில் மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பமாயிற்று.  என்னதான் இரு குடும்பமும் நன்கு பழகி வந்தாலும் நம் எஞ்சினியர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.  டீச்சர் காட்டை வித்துக் கள்ளு குடிச்சவர்களின் வகுப்பைச் சேர்ந்தவர்.  அந்தப் பகுதியில் எல்லாம் கா.வி.க.கு. பிரிவினர் தாழ்த்தப் பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதே பெரிய விஷயம், இந்த லட்சணத்தில் எங்கே போய் பொண்ணு கேட்பது?  அப்படியே துணிந்து டீச்சர் தன் வீட்டில் சொன்னாலும் முதலில் அவரைக் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்க முயற்சிப்பார்கள், அல்லது தீர்த்து விடுவார்கள், அத்தோடு விடாமல் பையனையும், அவன் குடும்பத்தாரையும் காலி செய்ய தயங்க மாட்டார்கள்.  இதுதான் அங்கு தொடர்ந்து நடக்கும் வரலாறு.

டீச்சருக்கு மாப்பிள்ளையும் பார்த்தாயிற்று.  மாப்பிள்ளை வீடு பார்க்கச் செல்கையில் மரியாதை நிமித்தமாக எஞ்சினியரின் அப்பா அம்மாவும் அழைக்கப்பட்டு இருந்தனர்.  டீச்சர் கல்யாணம் வேண்டாமென்று முரண்டு பிடித்து பார்த்தார், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லிப் பார்த்தார், யாரும் அவர் பேச்சை கேட்பதாக இல்லை.  இந்த லட்சணத்தில் எஞ்சினியரின் பெற்றோரை வேறு டீச்சரை கன்வின்ஸ் செய்யும் படி கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தனர்.  அடுத்து வந்த நாட்களில் வந்த என்ஜினியரை டீச்சரின் அம்மா, "நீயாவது இவளுக்கு புத்திமதி சொல்லுப்பா" என்று சொல்ல இருவரும் சேர்ந்து பல திட்டங்களை ரெடி செய்தனர்.  ஆனால் எதை செயல்படுத்துவது?


நிச்சயதார்த்தம் முடிந்தது.  ஒரு நாள் இரவு டீச்சர் எஞ்சினியரின் அம்மாவிடம் என்ஜினியரை விரும்புவதாகக் கூற அந்த அம்மா அதிர்ந்து விட்டிருந்தார்.  மேலும் டீச்சர் தான் மட்டுமே விரும்புவதாகவும் அதனால்தான் தனக்கு நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தில் விருப்பம் இல்லை எனவும் கூற, அம்மா டீச்சரை அறிவுரை சொல்லி அனுப்பி விட்டார்.  ஆனால் பாவம் அவருக்குத் தெரியவில்லை இது திட்டத்தின் ஒரு பகுதியென்று...  மண்டபம், பத்திரிக்கை, உறவினர், சாப்பாடு, பட்டு, நகை, சீர் என கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்தன.  டீச்சரின் அம்மா என்ஜினியரை கல்யாணத்துக்கு நிச்சயம் வரவேண்டுமென வேண்டுகோள் விடுக்க, எஞ்சினியரோ தனக்கு முக்கியமான பணி இருப்பதன் காரணமாக வர இயலாது என தன் வராமையை உறுதி செய்தார்.

விடிந்தால் கல்யாணம்...  பெண் வீடு, மாப்பிள்ளை வீடு என அத்தனை சனமும் பெண் வீட்டிலும், மண்டபத்திலும் உறக்கத்திலும், சீட்டாட்டத்திலும், மதுவிலும், சமையலிலும், கிழவிகளின் அரட்டையிலும் இருக்க டீச்சர் சந்தடியில்லாமல் காணாமல் போனார்.  சிறிது நேரத்தில் விஷயம் விஷம் போல் பரவ வீரர்கள் ஆயுதங்களுடன் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வேட்டைக்கு கிளம்பினர்.  அவர்களுக்கு கொடுக்கப் பட்ட அசைன்மென்ட், "ஜோடியாப் புடிச்சா பையன போட்டுத் தள்ளிட்டு பொண்ண கொண்டு வந்து சேக்கணும், கல்யாணம் பண்ணியிருந்தா ரெண்டு பேரையும் போட்டுத் தள்ளிறனும்."

திருசெங்கோட்டையே சல்லடை போட்டு தேடினர்.  வீடு வீடாக, கோவில் கோவிலாக, பஸ் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மலைக்கோவில், கடைகள், ஹோட்டல்கள் என அலசி ஓய்ந்தனர்.  இரவு ஒரு மணிக்கு வெளியேறிய ஒரு பெண் எப்படி ஒரு சிறிய டவுனிலிருந்து அரை மணி நேரத்தில் காணாமல் போனாள் என்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.  விடியற்காலை முதல் பஸ்சிற்கு முன்பாக பஸ் ஸ்டாண்டில் காவலுக்கு ஆட்களை வைத்து விட்டு சிறு சிறு குழுக்களாக பிரிந்து பக்கத்து ஊர்களுக்கு சென்று தேட ஆரம்பித்தனர்.  விடிந்தும் பெண் கிடைக்கவில்லை, ஒரு வாரம் ஆகியது, மாதமாகியது, பெண்ணைப் பற்றிய ஒரு சிறு தகவல் கூட இல்லை.  காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமா என யோசித்து பிறகு வேண்டாம் என முடிவானது.  பெண்ணைத் தலை முழுகி விடலாம் என்று முடிவாகி, குறைந்த பட்ச வெற்றியாக அதை நடத்திக் காட்டி விட்டார்கள்.

எனக்குள் பல கேள்விகள், டீச்சர் எஸ்கேப் ஆகி உடனே எப்படிக் காணாமல் போனார்? எஞ்சினியர் அப்போ எங்கே இருந்தார்? ஊர் முழுக்க ஒரு இன்ச் விடாமல் தேடியும் எப்படி அகப்படவில்லை?  இவர்களின் திட்டப் படி எஞ்சினியர் இரவு 12 மணிக்கு ஊருக்குள் வந்து யாருக்கும் தெரியாமல் முன்பே முடிவு செய்த ஓர் இடத்தில் பதுங்கி விட வேண்டியது.  சரியாக இரவு 1 மணிக்கு டீச்சர் அங்கு வந்து விட வேண்டியது.  இரவு முழுதும் அங்கே ஒளிந்திருந்து விடியற்காலையில் ஏற்பாடு செய்திருந்த லாரியில் எஸ்ஸாகி விட வேண்டியது.  வண்டி நேரே கேரளாவிலுள்ள கோயிலுக்குச் சென்று அங்கு எஞ்சினியரின் இரு வட இந்திய நண்பர்களின் முன்னிலையில் திருமணம்.  பிறகு தம்பதிகள் எஞ்சினியர் வீட்டுக் சென்று புது வாழ்வைத் துவங்க வேண்டியது.  இது அச்சு பிசகாமல் அப்படியே நடந்தது.  "எல்லாம் சரி, ராத்திரி எங்க ஒளிஞ்சு விளையாண்டீங்க" என்று கேட்டதுக்கு அவர் சொன்ன பதில்,
"சுடுகாடு..."


"திடுக்"கென அதிர்ந்தேன்.. அடப் பாவிகளா.. சுடுகாட்டிலுள்ள மயான ஊழியரிடம் ஏற்கனவே க்வார்ட்டர், கோழி பிரியாணி, கொஞ்சம் பணம் எல்லாம் கொடுத்து ரெடி செய்து விட்டார்கள்.  இவங்க நேரம் பார்த்து அன்று சுடுகாட்டில் இரண்டு உடல்கள் எரியூட்டப் பட்டுக் கொண்டிருந்தன.  அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஊரை விட்டு தப்பித்து ஓடி காதலில் ஜெயித்துவிட்டதாக பெருமையுடன் சொன்னார்.  இவர்களைத் தேடி அதே சுடுகாட்டுக்கும் ஒரு குழு வந்தது.  எரிந்து கொண்டிருந்த உடல்களைப் பார்த்து அப்படியே திரும்பிச் சென்றுவிட்டனராம்.  இரண்டு நாட்கள் கழித்து நம்ம எஞ்சினியர் வழக்கம் போல் வீட்டுக்கு வர அவர் அம்மா, "தெரியமா சேதி" என ஆரம்பித்து முழுக் கதையும் சொல்ல, எஞ்சினியர் மனதுக்குள் சிரித்துக் கொண்டே மாமியார் வீட்டுக்குச் சென்று அவர்களை சமாதானப் படுத்தி மாமியாரை சாப்பிடுமாறு வற்புறுத்திவிட்டு வந்தார்.

ஒன்றல்ல ரெண்டல்ல, நான்கு வருடங்கள் ஓடி விட்டன.  ஒரு நாள் திடீரென்று எந்த முன்னறிவிப்புமின்றி எஞ்சினியரின் அப்பா அவர் வீட்டில் வந்து நிற்க மருமகள் பேத்தியுடன் வரவேற்றிருக்கிறார்.  பெரியவர் தலை சுற்றி கீழே விழாத குறைதான்.  அதிர்ச்சி அடங்க அவருக்கு ஆறு மணிநேரம் ஆனது.  பிறகென்ன, பேத்தியுடன் இரண்டு நாட்கள் விளையாடிவிட்டு இதை தீர்த்து வைக்கிறேன் என்று சொல்லி சென்றார்.  முதலில் தன் மனைவிக்கு சேலத்திற்கு மாற்றுதல் வாங்கி குடும்பத்துடன் சேலம் வந்து விட்டார்.  ஒரு நாளில் டீச்சரின் அப்பாவை சேலத்திற்கு வரவைத்து நடந்த கதையைச் சொல்ல.. பிறகென்ன, பேத்தியைப் பார்க்க பெரிசுகள் அனைவரும் கேரளாவிற்கு கிளம்பி விட்டனர்.  ஆனால் இன்று வரை டீச்சரின் அண்ணன் தன் மருமகளைப் பார்க்க வரவேயில்லை என்பது தான் அவர்களுக்கு பெரிய குறையாக உள்ளது.  மச்சான்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள், ஆனால் அண்ணனுக்கு தங்கை மேல் உள்ள வறட்டுக் கோபம் இன்னும் தீரவேயில்லை.  இதை அவர் எனக்கு சொன்ன வருடம் 1996.  அண்ணனும் தங்கையும் இப்போவாவது இணைந்திருப்பார்கள் என நம்புகிறேன்.

வருடம் 1998.  முதல் கடையை ஊத்தி மூடிவிட்டு அடுத்த கடையை திறப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் சேலத்தில் உள்ள ஒரு கம்பெனியில் சில காலம் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வேலை செய்ய வேண்டும் என ஒதுக்கியிருந்தார்கள்.  நாமக்கல்லில் இருந்த எங்கள் கம்பெனியைச் சேர்ந்த சர்வீஸ் எஞ்சினியர் நன்கு பழக்கமாகி விட்டிருந்தார்.  மேலும் எனது சொந்தக் கிராமமும் நாமக்கல் பக்கம் என்பதால் நாமக்கல்லில் வேலை செய்வது பிடித்தமாகத்தான் இருந்தது.  நண்பர் நாமக்கல்லில் ஓரளவு பிரசித்தி பெற்றவர், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்த பொழுது அவர் மனைவி கவுன்சிலராக இருந்தார்.  சரி கதைக்குள் செல்வோம்..

நானும், சர்வீஸ் என்ஜினியரும் ஒன்றாகத்தான் சுற்றிக் கொண்டிருப்போம்.  அவருக்கு ஆபீஸ் வேலையை விட சொந்த வேலைதான் அதிகமாக இருக்கும்.  அப்படி இருக்கையில் ஒரு நாள் அவருடைய அண்ணனின் லாரி பட்டறையில் ஒரு பஞ்சாயத்து வந்தது... இந்த இடத்துல அப்படியே Freeze பண்றோம், Open பண்ணா...

பத்தாம் கிளாஸ் படிக்கும் ஒரு அழாகான பொண்ணு பாவாடை சட்டையோட ஸ்கூல் முடிஞ்சு சைக்கிள் ஒட்டிக்கிட்டு வீட்டுக்கு போறா.. திடீர்னு சைக்கிளின் பின் சக்கரத்துல பெண்ணோட பாவாடை சிக்கி இடுப்பிலிருந்து முழுவதுமாக அவிழ்ந்து சக்கரத்தினுள்ளே சுற்றிக் கொள்ள தடுமாறி கீழே விழுந்தாள்.  ரோட்டில் அந்த நேரம் பார்த்து பெண்கள் யாருமில்லை.  அவள் அணிந்திருந்த சட்டை அவள் தொடைகளை மறைத்துக் கொள்ள போதுமானதாக இல்லை.  அவமானத்தில் குறுகி கால்களைக் குறுக்கிக் கொண்டு அப்படியே ரோட்டில் அமர்ந்து விட்டாள்.  ஒரு ஆண் தனது இருசக்கர வாகனத்தை அவளை மறைக்குமாறு நிறுத்தி விட்டு பாவாடையை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.  ரோட்டில் சென்ற பலரும் என்ன நடக்கிறது என ஆவலுடன் எட்டிப் பார்த்து குரூர சிரிப்புடன் சென்று கொண்டிருக்க, அப்போது சைக்கிளில் வந்த ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் சைக்கிளை ஸ்டாண்ட் கூட போடாமல் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து தன்னுடைய வேஷ்டியை கழட்டி அமர்ந்திருந்த அவள் இடுப்பில் சுற்றி விட்டு அவளை எழுப்பி நன்கு கட்டி விடச் செய்தான்.


அப்பெண்ணிடம், "உன் அட்ரஸ்ஸ கொடுத்துட்டு வீட்டுக்குப் போ, உன் சைக்கிளை நான் எடுத்துட்டு வந்து தரேன்"ன்னு அவன் சொல்ல, அவள் செய்தாள்.  ஒரு மணி நேரம் கழித்து பையன் பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்து செல்ல, வாசலில் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தவள் ஓடி வந்து சைக்கிளை வாங்கிக் கொள்ள, பையன் அவள் சொன்ன நன்றியைக் கூட காதில் வாங்காமல் திரும்பிப் பார்க்காமல் வந்து விட்டான்.  பாரதிராஜா படத்தைப் பார்த்து வளந்த புள்ள போலிருக்கு, பையன் போனவுடன் வெள்ளுடை தேவதைகள் சுற்ற பகல் கனவில் மிதந்திருக்கிறாள் அவள்.

 
அவளின் ஒருதலைக் காதலினூடே +2 வையும் முடித்து விட்டாள்.  வீட்டில் அத்தை மகனுக்கு கட்டி வைக்க ஏற்பாடானது. ஒத்துக் கொள்ளாமல் முரண்டு பிடித்திருக்கிறாள்.  பலரின் பல வற்புறுத்தல்கள், சில பல அடி உதைகளுக்குப் பிறகு கட்டினால் எனக்குப் பாவாடை கட்டிவிட்டவனைத்தான் கட்டுவேன் என போட்டுடைத்து விட்டாள்.  அவனை எங்கு போய் தேடுவது.  இந்த இடத்தில் இரு குடும்பங்களின் நிலை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.  பெண் கா.வி.க.கு. வைச் சேர்ந்தவள்.  அவள் அப்பா நாமக்கல்லில் பல லாரிகள், பெட்ரோல் பங்க், நிலபுலங்கள், அரசியல் செல்வாக்கு, ஆள்பலம் என வலம் வந்து கொண்டிருப்பவர்.  பையனுக்கு அம்மா கிடையாது, அப்பா பஸ் ஸ்டாண்டில் செருப்பு தைக்கும் தொழிலாளி.  ஒரு வழியாக பையனை டிகிரி படிக்க வைத்துவிட்டு இனி பையன் நம்மை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இருப்பவர்.


நம்ம பொண்ணு கில்லாடி, இந்த ரெண்டு வருசத்துல பையனோட வீடு, காலேஜ், நண்பர்கள், எங்க எப்ப இருப்பான் எல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கா.  வீட்டுல "யாருடி அவன்"னு கேட்க அவளும் ஆள், அட்ரசோட சொல்லிட்டா.  பொண்ணு வீட்டுல ஆளாளுக்கு தனித் தனியா சாமியாட ஆரம்பிச்சுடாங்க.. சரி, இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம்னுட்டு நேரா போய் பையனையும் அவன் அப்பாவையும் ஜீப்ல அள்ளி போட்டுட்டு வந்து, "வேணுங்கற அளவுக்கு துட்டு தர்றோம், வெளியூர்ல போய் பொழச்சிக்குங்க, இங்க இருக்க வேணாம், மீறி இருந்தா காலி பண்ணிடுவோம்னு" அன்பா சொல்லி அனுப்பியிருக்காங்க.  அதுல இருந்தா கைத்தடி ஒன்னு பையனிடம் உண்மையான காரணத்தை அப்புறமா போட்டு கொடுத்திட்டான்.  நம்ம பயலுக்கு அப்பத்தான் பழைய பிளாஷ்பேக் ஞாபகத்துக்கு வந்திருக்கு.  அட, "உங்க பொண்ணு அலைஞ்சா அதுக்கு நான் ஏன் ஊரை விட்டு போகணும், நீ உன் பொண்ணை என்ன வேணுமின்னாலும் செஞ்சிக்கோ, நான் போக மாட்டேன்"னு பிடிவாதமா சொல்லிட்டான்.


பாத்தாரு ஓனரு.. "தூக்குடா அவனை"ன்னு சொல்லி மூணு நாளைக்கு வெச்சிருந்து துவைச்சிருக்காங்க.  பையனோட அப்பா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்க அவரை போலிஸ் ஸ்டேஷன்ல வெச்சு நல்லா கவனிச்சிருக்காங்க.  ஒரு வழியா அப்பாவும் பையனும் ஊரைவிட்டு போகிற நேரத்துல பெண்ணோட தோழி மூலமா பையனுக்கு ஒரு தகவல் வருது.  இன்ன தேதியில, இன்ன நேரத்திற்கு, இன்ன இடத்திற்கு வேணுங்கிற அளவிற்கு பணம்-நகையோட  வந்து காத்திருக்கப் போவதாகவும், பையன் வரலன்னா அங்கேயே செத்துப் போயிடப் போவதாகவும் வந்த தகவல்ல இருக்கு.  பாத்தான் பையன், "தக்காளி செய்யாத தப்புக்கு நம்மள மூணு நாள் வெச்சிருந்து திணற திணற அடிச்சானுங்களே, வெக்குரண்டா உங்களுக்கு பெரிய ஆப்பு"ன்னு முடிவு செஞ்சுட்டான்.  இந்த இடத்துலதான் நம்ம பயலுக்கும் புள்ளை மேல காதல் பத்திக்கிச்சு...


அப்பாவோட கடையை காலி பண்ணிட்டு அவரை பாதுகாப்பா வெளியூர்ல தங்க வெச்சுட்டான்.  பெண்ணோட அப்பாவின் தொழில் போட்டியாளர் ஒருவரிடம் உண்மையைச் சொல்லி தப்பித்துச் செல்ல லாரி உதவி கேட்க அவர் சந்தோசமா ஒத்துக்கிட்டார்.  அந்த நாளும் வந்தது, அந்த நேரமும் வந்தது, அவளும் வந்தாள், பத்து வருடங்களுக்கு உட்கார்ந்து தின்னும் அளவிற்கு பணமும் நகையும் கொண்டு வந்தாள், லாரியும் வந்தது, அவர்களின் முதல் காதல் பயணம் ஆரம்பமானது.  லாரி வடக்கு நோக்கி சிட்டாகப் பறந்தது.  பையனின் நண்பர்களை ஒரு பத்து நாள் காவலில் வைத்து காவல்துறை தன் கடமையை செய்தது.  பெண் வீட்டு டாட்டா சுமோக்கள் ஒரு வாரம் தமிழகமெங்கும் கோவில் கோவிலாக, லாட்ஜ் லாட்ஜாக சுற்றியது.  அநேகமாக பையன் அந்நேரம், "சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது" என ராஜஸ்தான் ஒட்டகத்தில் ஏறி பாட்டுப் பாடிக் கொண்டிருந்திருப்பான்...

மற்றொரு சம்பவம்... அரசியல், சட்டம் மற்றும் காவல் துறையில் உச்ச பதவியில் உள்ளவர்கள் சம்பந்தப்பட்டது.  விறுவிறுப்பிற்கு சிறிதும் பஞ்சமில்லாத பல திடுக் திருப்பங்களுடன் கூடிய வெறித்தனமான காதல் அது.  பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்...

- அன்புடன்
- மலர்வண்ணன்