Tuesday 24 December 2013

2013 - டாப் 10 காமெடிகள்: (என் பார்வையில்)

10.  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் IPL சூதாட்டத்தில் என் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்த ஒட்டுமில்ல, உறவுமில்ல  - சிமெண்ட் மூட்டை சீனிவாசன்.

09.  நம்ம மான்புமிகு முதல்வர் அம்மாஆ அவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமா ஆக்க பாடுபடுறாங்க - டாகுடர் விஜய் (தலைவா ரிலீசுக்காக)

08.  ஆஸ் ஐ ஆம் சஃப்பரிங் ஃப்ரம் ஃபீவர் ஐ ஆம் அநேபிள் டு கமிங் டு காமன்வெல்த் இஸ்கூல் - Letter from மண்நுமோகன்ஜி to ராசபக்ச


07.  ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறோம் - சோனியா காங்கிரஸ்


06.  பாரத ரத்னா (வாழ்த்துக்கள் சச்சின்)


05.  அவர் ஒரு பெண், அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை, ஆனாலும் கை விலங்கிட்டு நிர்வாணப் படுத்தியிருக்கிறார்கள், தேவயானியை மீட்காமல் ஓய மாட்டேன் - சல்மான் குர்ஷித்


04.  டெல்லி சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டி


03.  விஸ்வரூபம் ஒலகம் முழுக்க ரிலீஸ் பண்றோம், அமெரிக்கா அனுப்புறோம், கொறஞ்சது பத்து ஆஸ்காரவது அள்றோம் - ஒலக நாயகனின் அடிபொடிகள்


02.  கூடன்குளத்திலிருந்து உற்பத்தி செய்யப் படும் 4000 மெகாவாட் மின்சாரத்திலிருந்து தமிழகத்திற்கு கனிசமான அளவு வழங்கப்படும் - all அமைச்சர்ஸ் from சென்ட்ரல் கவர்மென்ட்


*

 
*

*

01.  பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி

Tuesday 17 December 2013

பாம்பின் கால்...!!!

இரண்டு நாட்களுக்கு முன் எமது அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர் வழக்கம் போல் காலை அலுவலகத்தைத் திறந்தால், நடு ஹாலில் சுமார் எட்டடியிலிருந்து பத்தடி நீளமுள்ள கருநாகம் ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருந்திருக்கிறது.  அடிப்பதற்கு குறைந்தது மூன்று பேராவது வேண்டும், அவ்வளவு நீளம், மற்றும் உடல்வாகு கொண்ட முரட்டு ஜீவன்.  கதவைத் திறந்து விட்டு ஒரு தடியை வைத்து விரட்டியிருக்கிறார், முதலில் சீறிய நாகம் பின்பு பணிந்து வெளியே ஓடி விட்டிருக்கிறது.  நம்மாளு அதை பின்னால் சென்று விரட்டியபடி வீடியோ எடுத்திருக்கிறார்... அது காம்பவுண்ட் ஓரத்தில் உள்ள எலி வளையின் உள்ளே புகுந்து விட்டது.

இங்கு வீடியோவில் காட்டப் பட்டுள்ளது அப் பாம்பின் ஒரு பகுதி மட்டுமே...!!
நான் அலுவலகம் வந்த பின்பு சிறிது நேரம் இந்தக் கதை ஓடி அடங்கி அவரவர் வேலையைப் பார்க்க செல்ல, ஒரு 10.30 மணி வாக்கில் அதே வளையின் வழியே தலையை மட்டும் அது காட்டி உள்ளே சென்று விட,  மீண்டும் ஏரியாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.  நான் கிண்டியிலுள்ள வன அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டேன்.

போனை எடுத்தவர்கள் பாம்பின் குலம், கோத்திரம், ஜாதகம், பிறந்த நேரம், நட்சத்திரம், ருதுவான நேரம், அங்க அடையாளம், எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டு இன்னொரு செல் நம்பர் கொடுத்து அவரை தொடர்பு கொள்ளமாறு கூறினார்கள்.  அந்த எண்ணிற்கு அழைக்க ஒரு பெண்மணி எடுத்தார்...

"நான் ஆதம்பாக்கத்திலிருந்து பேசுறேங்க, பாம்பு புடிக்கிறவர் இருக்காருங்களா.."
"அவரு இப்போ பாம்பெல்லாம் புடிக்கிறதில்லீங்க..."
"இல்லீங்க, ஆபீஸ்ல இந்த நம்பர் தான் கொடுத்தாங்க..."
"அய்யே... இந்தா உனக்குத்தான், பாம்பு புடிக்கனுமாம்...; (சிறிது நேரம் கழித்து ஓர் ஆண் குரல்), சொல்லுங்க சார், எங்க இருந்து பேசறீங்க..."
"ஆதம்பாக்கத்திலிருந்து பேசுறேங்க, நாகப் பாம்பு ஒன்னு வீட்ல இருக்கு, புடிக்கணும்.."

மறுபடி இவர் பாம்பின் வயது, marital status , கல்வியறிவு, அனுபவம், சம்பளம், notice period, job location எல்லாவற்றையும் கேட்டுவிட்டு,
"சார்.. இப்போ நான் வேலைக்குப் போறதில்ல, நான் ஒரு நம்பர் தர்றேன், அவரான்ட பேசுங்க, வந்து பிடிப்பார்..." என்று சொல்லி ஒரு நம்பர் தந்தார். 

சூரியன் படத்தில் கவுண்டமணி "சத்திய சோதனை"ன்னு சொல்லும் காட்சி கண்முன் வந்து போனது... விக்கிரமாதித்தன் கணக்கா மறுபடியும் கொடுத்த எண்ணிற்கு அழைத்தேன்.
"ஹலோ..."
"பாம்பு புடிக்கிறவருங்களா..."
"ஆமா, நீங்க..."
"ஆதம்பாக்கத்திலிருந்து பேசுறேங்க, நாகப் பாம்பு ஒன்னு வீட்ல இருக்கு, புடிக்கணும்.."
"இந்த நம்பர் உங்களுக்கு யார் கொடுத்தா..." (அடேய்ய்ய்ய்ய்...)
"ஆபீஸ்ல கொடுத்தாங்க..."
"என்ன பாம்பு?"
"கரு நாகமுங்க..."
"எவ்வளவு நீளம்?"
"எட்டடி இருக்கும்..."
"வீட்டுக்குள்ள இருக்கா...?"
"வீட்டு காம்பவுண்டுக்குள்ள இருக்கு..."
"மேலேயே இருக்கா.."
"இல்ல, எலி பொந்துக்குள்ள போயிடுச்சி..."
"எலி பொந்து, எவ்ளோ பெரிசு இருக்கு?
"தெரியாது..."
"எலி பொந்து கால்வாயோட சேர்ந்திருக்கா?" (யப்பா சிபிஐ, நான் வேணா உள்ள பூந்து பாக்கவா..?)
"தெரியாது..."
"இப்போ வெளிய இருக்கா, உள்ள இருக்கா?"
"உள்ள போயிட்டு, வெளிய வந்துட்டு மறுபடி உள்ள போயிடுச்சி..."
"நீங்க ஒன்னு பண்ணுங்க..."
"சொல்லுங்க..."
"அது மறுபடி வெளிய வந்தா, என்னான்ட போன் பண்ணி சொல்லுங்க..."
"சொன்ன உடனே வந்து புடிப்பீங்களா?"
"இல்ல, போன் பண்ணி சொல்லிட்டு என்னை வந்து பிக்கப் பண்ணிட்டு போங்க..."
"நீங்க எங்க இருக்கீங்க?"
"வேளச்சேரி செக்போஸ்ட் கிட்ட"
"ஒரு ஆட்டோ புடிச்சு வந்துருங்க, நான் அதுக்குண்டான காசை கொடுத்திர்றேன்..."
"அப்படியெல்லாம் நாங்க வரக் கூடாதுங்க, பார்ட்டி தான் வந்து எங்கள இட்டுக்கினு போகணும்..."
"அய்யா பாம்பு புடிக்கிறவரே, ஒன்னு சொல்லட்டுங்களா..!!"
"சொல்லுங்க..."
"மறுபடி பாம்பு வந்தா நானே புடிச்சு ஒரு சாக்குல போட்டு கட்டி எடுத்துட்டு வந்து உங்ககிட்ட கொடுத்திர்றேன், ஓகேவா?!"
"இன்னா சார், தமாஷ் பண்றீங்களா?"
"யோவ்... இவ்ளோ நேரம் நீ பண்ண, நான் இப்போ பண்ணக் கூடாதா?"

ம்ஹ்ம்ம்... பாம்பு இன்னும் வெளிய வரல....
பாம்பின் கால்......, சத்தியமா எனக்குத் தெரியல...!!


- அன்புடன்
- மலர்வண்ணன்


Tuesday 8 October 2013

தலீவரும்... கவிஞரும்...

நான் +1 படிச்சிட்டு இருக்கையில எங்க நல்லொழுக்க (அப்படி-ன்னு ஒரு பாடம், வாரத்துக்கு ஒருக்கா ஒரு கிளாஸ் இருக்கும்) ஆசிரியர் சொன்ன ஒரு கிசுகிசு..
ஒருக்கா நம்ம தலீவரும், கவிஞரும் ஒரு படத்துக்கான வசனத்தையும், பாடல்களையும் மாடர்ன் தியேட்டர்ஸ்ல உக்காந்து முடுக்கி முடுக்கி எழுதையில, ராவானதும் ஆளுக்கு ரெண்டு ரவுண்டு ராவா போட்டுட்டு வேட்டைக்கு கிளம்பியிருக்காங்க..

சென்னையா இருந்தா தலீவரு வரிசையா கொண்டு வந்து நிறுத்தியிருப்பாரு.., சேலமாச்சா, ஒன்னும் கெடைக்கல.. ஒரு வழியா புரோக்கர புடிச்சு ஒரு இடத்துக்கு போய் சேந்தாங்க.. லேசான இருட்டுல நாலஞ்சு பேர கொண்டாந்து காட்ட, தலீவர் ஒருத்தர டிக் பண்ணியிருக்காரு.. "ரூம்ல வெயிட் பண்ணுங்க சார், வரும்"ன்னு புரோக்கர் சொல்லிட்டு 10 நிமிசம் கழிச்சு அனுப்பி விட்டிருக்கான்.

போன வேல முடிஞ்சது. கவிஞர் தலீவரிடம் "காசு குடுத்திருப்பா"ன்னு சொல்ல, தலீவரோ "நீ வெச்சுருப்பன்னு நான் கொண்டு வரலியே"ன்னு சொல்ல சன்னமா ரெண்டு பேருக்கும் கசமுசா ஆகிடுச்சி.. விடுவாரா நம்ம தலீவரு.. "ஆடாம இரும் கவிஞரே, நான் பாத்துருக்கேன்"னுட்டு, புரோக்கர கூப்பிட்டிருக்காரு..

அவனைப் பாத்து நம்ம தலீவரு மூஞ்சிய உக்கிரமா வெச்சுகிட்டு, "ஏன்டா, ஆரு கிட்ட உன் வேலைய காட்டுற, காட்டுனது 18, அனுப்பினது 32-ஆ?, பிச்சிபுடுவேன், நாங்கெல்லாம் ஆருன்னு தெரியுமில்ல, நாள பின்ன நீ தொழில் நடத்துனுமா வேண்டாமா"-ன்னு வேட்டிய தூக்கிட்டு எகிற, புரோக்கரோ, "அய்யா தொர, நீ ரூவாவே தர வேணாம், முதல்ல எடத்த காலி பண்ணு"-ன்னு அனுப்பி வெச்சிட்டானாம்.

பி.கு: ஆராவது, ஆரு அந்த தலீவரும் கவிஞரும்-ன்னு கேட்டாக்க "ஜில்லா" படத்துக்கு டிக்கெட் வாங்கி குடுத்துருவேன்..!!

Thursday 26 September 2013

"மூடர் கூடம்" நவீனுக்கு சில கேள்விகள்

அட்டகத்தி, ஆரண்ய காண்டம், பாலை, சூது கவ்வும், ந.கொ.ப.கா., மதுபானக்கடை, பிட்சா என அவ்வப்போது வரும் ஆச்சரியங்களில் சமீபத்தில் வந்த மூடர் கூடத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன் நேற்று "Attack the Gas Station" (கொரியன்-1999) பார்க்கும் வரை.  தமிழில் வந்திருக்கும் ஒரு முழுநீள Black comedy, Dark Humor என்று பெரும்பாலான விமர்சகர்களால்  சிலாகிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் மூடர் கூடம் இயக்குனர் நவீனுக்கு சில கேள்விகள்:
பிற மொழிப் படங்களின் theme-களை  தழுவி எடுப்பதோ, one liner-களை மட்டும் எடுத்துக் கொண்டு திரைக்கதையில் வித்தியாசங்களைப் புகுத்தி விளையாடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் போது முக்கால்வாசி காட்சிகளை ஏன் அப்படியே Attack the Gas Station-ல் இருப்பது போலவே வைத்தீர்கள்? 

ஸ்மார்ட்டான டீம் லீடர், முட்டாள்னு சொன்னால் கோபம் கொள்பவன், டீம் லீடர் மேல் இம்ப்ரெஸ் ஆகும் சின்னப் பெண், கிண்டல் செய்யப் படும் குண்டு பையன், அழகான பெண் மேல் ஆசைப் படும் திருடர்களில் ஒருவன் என கதாபாத்திரங்களையும் அதே போல் ஏன் அமைத்தீர்கள்?

ஒவ்வொரு திருடனுக்கும் காட்டப் படும் சின்ன சின்ன flashback சமாச்சாரங்களையும் அப்படியேவா காட்ட வேண்டும்? அதுவும் பள்ளியில் தண்டனை வாங்குவது, பெற்றோரிடம் அடி வாங்குவது எல்லாவற்றையும் காப்பி-பேஸ்ட் பண்ணியது ஓவராகத் தெரியலையா?
தலைகீழாக இருக்கச் சொல்லி தண்டனை தருவது (அதற்கான flashback), ஒரு தடியை கையில் வைத்துக் கொண்டு அனைவரையும் மிரட்டுவது, ஒரு கட்டத்தில் பினையாளிகளில் ஒருவனிடமே தடியைக் கொடுத்து காவல் காக்க வைப்பது, அழகுப் பெண்ணின் காதலனின் சட்டையைக் கிழித்துவிட்டு பின் தன் சட்டையைத் தருவது, etc என காட்சிகளைக் கூட ஏன் உருவினீர்கள்?  அந்தளவுக்குக் கற்பனை வறட்சியா?

இந்த விஷயம் உங்கள் குரு மற்றும் தயாரிப்பாளர் பாண்டிராஜுக்கு முன்பே தெரியமா?

அனைவரையும் அழகாக நடிக்க வைத்து அவர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்த உங்களுக்கு, பாண்டிராஜிடம் பணியாற்றிய உங்களுக்கு சொந்தமாக ஒரு சப்ஜெக்ட் கூடவா கிடைக்கவில்லை?

ஜாம்பாவான்களான மணிரத்னம் தனது 6-வது படமான நாயகனிலும், கமல் தனது 100-வது படமான ராஜ பார்வையிலும் (ராஜ்கமல் பிலிம்ஸ்), கவுதம் மேனன் தனது 6-வது படமான ப.கி.மு.ச.த்திலும் தான் தங்களுடைய உருவல்களை ஆரம்பித்தனர்.  திறமையுள்ள நீங்கள் ஏன் முதல் படத்திலேயே நவீன்?

"மூடர் கூடம்"ன்ற பெயர் படத்துக்கு வெச்சீங்களா, எங்களப் பாத்து வெச்சீங்களா?

ஒரு விஷயத்தை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். Attack the Gas Station-ஐ விட மூடர் கூடம் அற்புதமாக இருந்தது.  பல இடங்களில் வசனங்களும் காட்சியமைப்பும் கூர்மையாக இருந்தன.  பொம்மைக்கான flashback-ல் "நீயும் பொம்மை, நானும் பொம்மை" பாடலைப் புகுத்தியது ஓர் உதாரணம்.  உங்களிடம் வியக்கும் திறமைகள் இருக்கின்றன.  Better Luck Next Time நவீன்...
 

- அன்புடன்
- மலர்வண்ணன்


பி.கு.: ஆரண்ய காண்டம் படத்தை "Perro come perro " என்ற ஸ்பானிஷ் படத்தின் தழுவல் என்று சிலர் சொல்லியிருந்தனர்.  அப்படத்தைப் பார்த்தேன்.  பல படங்களில் வந்த one liner மட்டுமே அது.  போதைப் பொருள் கடத்தலில் வந்த பணத்திற்காக மூன்று கும்பல்கள் அடித்துக் கொள்வதுதான்.  மற்றபடி கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள், வசனம் அனைத்தும் வேறு.  தமிழுக்குப் புதிதாக இருக்கலாம்; பிரேசிலியன். மெக்சிகன் படங்களில் இது சகஜம்.

Tuesday 24 September 2013

சென்னையில் பிரியாணி - புரட்டாசி ஸ்பெஷல்

அபின், ஆல்கஹால், கிரிக்கெட், ஜிஹாத், இன்டர்நெட்  போல எனக்கு பிரியாணி.

சேலத்தில் இருந்த போது கிச்சிபாளையம் ஸ்டார் பிரியாணியும் சுக்காவும் தான் எங்கள் நண்பர் வட்டத்தின் சாய்ஸ்.  ஞாயிறு மதியம் பார்சல் கட்டிக் கொண்டு தீர்த்தத்துடன் ஏற்காடு மலையேறி விடுவோம்.  முஸ்லிம் நண்பர்களின் தயவால் மாதம் ஓரிரு முறை கல்யாண பிரியாணியையும் அட்டாக் செய்து விடுவேன்.  பொண்ணு-மாப்பிள்ளை யார்ன்னு தெரியாது, கல்யாண வீட்டுலயும் யாரையும் தெரியாது, இருந்தாலும் முதல் பந்தில உக்கார்ந்து பிரியாணியுடன் தால்ச்சாவையும் சேர்த்து அடித்து விழாவை சிறப்பித்து விட்டு வருவேன்.  அழைத்துச் செல்லும் நண்பன் தான் அமராமல் நமக்கு ரெண்டாவது ரவுண்டிற்கும் பீஸ்கள் விழுமாறு ஏற்பாடு செய்து கொண்டிருப்பான்.  இன்னி வரைக்கும் சிறுத்த சிக்கினது கிடையாது.

சென்னை வந்த பிறகு பல இடங்களில் அடித்து ஆடி செய்த பிரியாணி ரிசர்ச் தான் இந்தப் பதிவு.

அஞ்சப்பர், பொன்னுசாமி, காரைக்குடி வகையறா ஹோட்டல்களுக்குப் போவதிற்குப் பதிலாக பட்டினி கிடக்கலாம்.  விலையிலும் சுவையிலும் சாவு பயத்தைக் காட்டிடுவாங்க.
தலப்பாக் கட்டி, திண்டுக்கல் வேலு ரெண்டுலயும் ஒரே ஃபார்முலா; ஆனா பிரியாணி சாப்பிட்ட திருப்தி இருக்காது.
பெரியமேடு பிரியாணி "வில் மிக்சிங்"ன்னு ஊர்ல பாதி பேருக்குத் தெரியும்.
அல்-ரீஃப், ஆசிப் பிரதர்ஸ் பிரியாணியில் தாபா டச் இருக்கும், ஆனால் முகல் ஃபினிஷிங் இருக்காது.
கிரீம்ஸ் ரோடு ஹைதராபாத் பிரியாணி சாப்பிடுறதுக்கு பதிலா  பத்தியச் சாப்பாடு சாப்பிடலாம்.  அளவு சுத்தமா பத்தாது.      
ஹயாத், ரெயின்ட்ரீ, கோரமண்டல், மெரிடியன், அக்கார்ட், ராடிசன்  எதுலயும் ஒண்ணு பிரியாணியோ, இல்ல கிரேவியோ, சமயத்துல ரெண்டுமா விளங்காது.  குறிப்பா நல்லிய கடவாய்ல வெச்சு கடிச்சு உறிஞ்ச முடியாது.  கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாம பிரியாணிக்கு ஸ்பூன் வெச்சு தருவானுங்க..!! (Ustad Hotel படத்தில் சில 5 ஸ்டார் ஹோட்டல்களின் பிரியாணி ரகசியத்தை உடைத்திருப்பார்கள்)

 
ஜார்ஜ் டவுன் மூர் தெருவிலுள்ள கல்யாண பிரியாணிக்கு பலமுறை சென்று க்யூவில் நின்று டோக்கன் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.  சுவையாகவும் நல்ல வலுவான விருந்தாகவும் இருக்கும்.  பிறகு அவர்களே எழும்பூர், பீட்டர்ஸ் ரோடு என கிளைகளைத் திறந்து கல்லா கட்டினார்கள்.  கல்யாண பிரியாணிதான் சிறந்ததென்று நினைத்திருந்தேன் பல்லாவரம் மொஹிதீன் பிரியாணியை சுவைக்கும் வரை.

பல்லாவரம் கன்டோன்மேன்ட்டுக்குப் பின்னால் உள்ளது மொஹிதீன் பிரியாணிக் கடை.  நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டும்.  மதியம் சென்றால் பிரியாணி அடித்துக் கொடுக்கவும், பார்சல் கட்டவும் மட்டும் ஆறேழு பேர் இருப்பார்கள்.  அவ்வளவு கூட்டமாக இருக்கும்.  சரியாக 12:30லிருந்து 01:30க்குள் நான்கைந்து ஜீப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக சீரான நேர இடைவெளியில் வரும்.  தயாராக இருக்கும் பார்சல்களை ஜீப்கள் அள்ளியபடி சென்றுவிடும்.  ஒரு ஹோட்டலின் சுவையை காவல் துறையையன்றி வேறாரறிவார்?

மொஹிதீனுக்கு சவால் விடும் வகையில் அடையாறு சாஸ்த்ரி நகரில் ஒரு பிரியாணி ஜாயிண்ட் உள்ளது.  ஞாயிறு மாட்டும், அதுவும் பார்சல் மட்டும், அதுவும் சனிக் கிழமையே முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும்.  வீட்டிலேயே ஆட்டை அறுத்து சமைத்துத் தருகிறார்கள்.  1 பக்கெட் மட்டன் பிரியாணி ரூ.1100.  7 அல்லது 8 பேர் திருப்தியாக சாப்பிடலாம்.  12 டிக்கா அளவிலான துண்டுகள் அடங்கிய சிக்கன் வறுவல் ரூ.250.  வீட்டிக்கு விருந்தினர் வந்தால் எங்கள் சாய்ஸ் இந்த ஹோம் மேட் பிரியாணிதான்.  இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கறி வாங்க வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் கொண்டு சென்றைதைப் போன்று இதற்கும் வீட்டிலிருந்தே பாத்திரம் கொண்டு செல்ல வேண்டும்.  சில விஷயம் தெரியா விருந்தாளிகள் பிரியாணி சூப்பரா சமைக்கிறீர்கள் என்று வீட்டு அம்மணியைப் பாராட்டிச் செல்வார்கள்.

சென்னையில் இந்தப் பெயரில்லா சாஸ்த்ரி நகர் பிரியாணிக்குப் போட்டியாகவோ, இதை விடச் சிறந்ததாகவோ இன்னும் பிடிபடவில்லை.  தேடிக் கொண்டே இருக்கிறேன்.  என் பிரியாணிப் பயணம் தொடரும்....!!

- அன்புடன்
- மலர்வண்ணன் 

Tuesday 10 September 2013

நிறைநீர நீரவர் கேண்மை

ஈமெயிலும் செல்போனும் வந்த பிறகு தமிழின் எழுத்துப் பயன்பாடு காவல் நிலையத்தில் புகார் எழுத, அரசு அலுவலகத்தில் மனு கொடுக்க, வீடு-நிலம் கிரயம் செய்ய மட்டுமே உபயோகப் படுத்தப் பட்டு வந்தது wordpress, blog போன்றவை வரும் வரை.

எழுத்தாளர்களின் மற்றும் எழுதுவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்களின் எழுத்தை மட்டும் தான் பிறர் வாசிக்க முடியும் என்ற நிலை மாறி, ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் எழுதலாம், பகிர்ந்து கொள்ளலாம், விமர்சனம் செய்யலாம் என்ற நிலையை wordpress-ம்  blog-ம் உருவாக்கிக் கொடுத்துள்ளன.  இன்ட்லி, தமிழ்மணம், கீற்று உள்ளிட்ட வலைதளங்கள் பகிர்தலை செவ்வனே செய்து வருகின்றன.  தவிர facebook, twitter போன்ற சமூக வலைதளங்களில் தமிழ் உள்ளே நுழைய ஆர்வமுடன் பலரும் தங்கள் நிலைப்பாட்டையும், சிந்தனைகளையும்(!), கருத்துக்களையும், பகடிகளையும், விருப்பு வெறுப்புக்களையும், கோஷ்டிச் சண்டைகளையும் தாய்மொழியில் உணர்வுப் பூர்வமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது உலகெங்கும் தமிழில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ப்ளாக்கர்ஸ் தங்கள் படைப்புகளை, கருத்துக்களை எழுதி வருகின்றனர்.  முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் பெரிய இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.  என்னைப் போல் "ஏனோ தானோ" என எழுதுபவர்கள், கும்மியடிப்பவர்கள், திரைவிமர்சனம் எழுதுபவர்கள், விளையாட்டு விமர்சகர்கள், வம்புச்சண்டைவாதிகள்  நீங்கலாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மிக சீரியஸாக வரலாறு, பொருளாதாரம், அரசியல், உலக சினிமா, நூல் விமர்சனம், தொடர்கள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கணம், இலக்கியம் என பட்டையைக் கிளப்புகின்றனர்.

"தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற நிலை மாறி "தமிழ் இனி மிக மிக மெல்லச் சாகலாம்" என்ற நிலைக்கு தமிழ் உயரக் காரணமானவர்களில் இந்த ப்ளாகர்ஸ் முக்கிய இடம் வகிக்கின்றனர்.  இவர்களை ஒன்றிணைத்து அழகு பார்த்தால் என்ன என்ற எண்ணம் உருவாக சில மூத்த (ப்ளாக் எழுதுவதில் மட்டும்) பதிவர்கள் இணைந்து 2012-ல் முதலாம் உலகத் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பை சிறப்பாக நடத்தியும் காட்டினர்.  தொடர்ந்து இந்த வருடமும் மேலும் சிறப்பாக, பிரபல சமூக  எழுத்தாளர்கள் பங்கு பெற்று வாழ்த்த சென்னையில் நடத்திக் காட்டினர்.

ப்ளாகர்ஸ் பலரும் இளைஞர்கள் என்பது எதிர்பாரா மகிழ்ச்சி.  கணிசமான அளவில் பெண்களும்,  7 வயது முதல் 70 வயது உள்ள பல பிளாக்கர்களும் விழாவிற்கு வந்திருந்து வியப்பில் ஆழ்த்தினர்.   எழுத்தாளர்கள் பாமரன், வா.மு.கோமு, புலவர் ராமானுசம் போன்றோரை நேரில் சந்தித்து பேசியது பெருமையாக இருந்தது.  முகம் தெரியாத பலரும் தமிழால் இணைந்து, நாள் முழுதும் நேரம் போவது தெரியாமல், வயது வித்தியாசம் இல்லாமல், பல(ர்) கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட அற்புதமான மன நிம்மதியை கொடுத்த நாள் அது.


விழாக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி..!


- அன்புடன்
- மலர்வண்ணன்


Friday 23 August 2013

கற்பும் கர்ப்பமும்

காதல், காமம், கன்றாவி, கற்பு, கர்மம் எல்லாமே கலவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலேயன்றி காதலிக்கும் போது காமம் கூடாது, திருமணம் செய்த பிறகும் காதலிக்கலாம் என்று கேனத்தனமான கொள்கை உடையவர்கள் இதைப் படிப்பதை தவிர்த்து வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் பார்க்கலாம்...

தமிழ் சினிமாவின் சமகால இயக்குனர்களில் செல்வராகவன், பாலா, மிஷ்கின், அமீர், பிரபுசாலமன் போன்றவர்களை ஒரு வகையாகவும், வசந்தபாலன், பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், சசி போன்றவர்களை ஒரு வகையாகவும் பிரித்துக் கொள்ளலாம்.  முதல்வகை இயக்குனர்கள் எதற்காகவும் தங்கள் படைப்பில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத, தாங்கள் நினைப்பது மட்டும் தான் திரையில் வரவேண்டும் என்ற பிடிப்போடு இருப்பவர்கள்.  இரண்டாம் வகையில் இருப்பவர்கள் எப்படியாவது இந்த சமூகத்திற்கு மெசேஜ்(!) கொடுத்தாக வேண்டும், அதே சமயம் படமும் அனைத்து சென்டர்களிலும் ஹிட்டடிக்க வேண்டும் என்ற நோக்கில் படமெடுப்பவர்கள். 

சங்கர், ஹரி, தரணி, etc. என்றொரு பெரிய லிஸ்ட் இயக்குனர்கள் லாஜிக்கையெல்லாம் தூக்கி குப்பையில் கடாசிவிட்டு "ஹிட்" ஒன்றே
குறி என, வெறியுடன் ஒரே பார்முலாவை வைத்து அரைத்த மாவை அரைத்து காலந் தள்ளிக் கொண்டிருக்கின்றன.  பாலாஜி தரனீதரன் (ந.கொ.ப.கா), தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்), கமலக்கண்ணன் (மதுபானக் கடை), பா.ரஞ்சித் (அட்டகத்தி) என ஒரு பட்டாளம் திடீரென உள்ளே புகுந்து ஆனந்த அதிர்ச்சியையும் அவ்வப்போது வழங்குவதுண்டு.

விடலைப் பருவ காதலை பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லையைத் தொடர்ந்து பல இயக்குனர்கள் நோண்டி நுங்கு எடுத்து இன்னும் சப்பி போட்ட மாங்கொட்டையில் சதையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.  பூணூல்-சிலுவையைக் கழட்டி வீசிய க்ளைமேக்ஸைத் தொடர்ந்து "ஆற்றைக் கடந்து ஓடிப் போய் காதலில் வெற்றியடைவது",  "ஸ்லோ மோஷனில் ஓடி ரயிலைப் பிடித்தவுடன் பச்சைக் கொடியைக் காட்டி சுபம் போடுவது", "ரெண்டுபேரும் செத்துப் போவது", "ஒருத்தர் செத்து ஒருத்தர் லூசாவது (இதில் லூசாவது பெரும்பாலும் ஆண்களே)", "பொது எதிரியைக் கொலை செய்து ஜெயிலுக்குப் போவது" என பல வரலாற்று முடிவுகள் கொண்ட பாதையை தமிழ் சினிமா கடந்து வந்திருக்கிறது.  ஆனால் நிஜத்தில் நடக்கும் சில நிகழ்வுகளோ, "பெண் முகத்தில் ஆசிட் அடிப்பது", "பெற்றோர் தூக்கு மாட்டிக் கொள்வது", காலனியைக் கொளுத்துவது", "போலிஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து செய்து கொள்வது", "தற்கொலை அல்லது கொலை செய்யப் பட்டவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது" போன்றவை.
சென்னை நகரத்தில் தங்களைத் தானே மாடர்ன்கள் என நினைத்துக் கொண்டு பல அரை வேக்காடுகள் செய்யும் இன்ஸ்டன்ட் காமத்தையும், ரூம் போட்டு மேட்டர் செய்வதில் இருக்கும் ஆர்வத்தில் பாதுகாப்பை மறந்ததையும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் ஒரு படைப்பாக்கி மிடில் கிளாஸ் ஆடியன்ஸை நோக்கி குறி வைத்து எறிந்து அதில் வெற்றியும் பெற்று விட்டார் "ஆதலால் காதல் செய்வீர்" சுசீந்திரன்.  1989-ல் புதியபாதையில் "நிரோத் உபயோகம்" பற்றி அனைவருக்கும் மண்டையில் உறைக்கும் வகையில் படு லோக்கலாக பார்த்திபன் சொன்னதை ஒரு ஓரத்தில் ஜாம் தடவி சுசீந்திரன் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

படத்தின் முற்பாதியில் வரும் கல்லூரிக் காதல், பெண்-பெற்றோர் உறவு, பையன்-பெற்றோர் உறவு, நட்பு என்று எதிலும் எந்தப் புதுமையும் இல்லை.  பிற்பாதியில் கல்லூரிக்குச் செல்லும் பெண் கர்ப்பமானதைத் தொடர்ந்து இரு குடும்பங்களிலும் ஏற்படும் குழப்பங்களை பார்வையாளர்களுக்குத் தெளிவாக காட்டி பரபரப்பை ஏற்படுத்திய  விதம் ஓகே.  பெண்ணின் பெற்றோர்களாக துளசியும் ஜெயப்பிரகாஷும் வாழ்ந்து காட்டியுள்ளனர்.

படம் முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு ஹீரோ/ஹீரோயின் என்ட்ரி... பஞ்ச் டயலாகாக ஒரு அலறல்... "அட" போட வைத்தது.

காதல்-காமம் ரெண்டுமே "மேட்டரு"க்கான மீட்டர் தான் என்பதை குழப்பமில்லாமல் சொல்லி; கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பெண்கள்- உடலுறவு, பாதுகாப்பு, கர்ப்பம், கருத்தடை, பாலியல் நோய்கள், கருக்கலைப்பு, ஆணுறை, லூப், Morning-After Pill போன்ற விபரங்களை தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்பதை முன் வைத்து இப்படம் வந்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.  அதை விடுத்து கர்ப்பமான பெண்ணின் பெற்றோர் அழுது புலம்புவதும், பஞ்சாயத்து பேசுபவர்கள் பெண்ணைப் பற்றி மட்டும் கேவலமாகப் பேசுவதும் (பெண்ணின் அம்மா கூட பையனின் அக்காவை கேவலமாகப் பேசுகிறார்), திருமணம் ஆகாத ஒரு பெண்ணின் கருக்கலைப்பு என்பதை போதைப் பொருள் கடத்தல் ரேஞ்சை விட ஓவராகக் காட்டியதும், எப்படியாவது அந்தப் பெண் தன் கருவை கலைத்து விட மாட்டாளா.. என்ற எண்ணத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்த மேற்கொண்ட பிரயத்தனங்களும் சலிப்படைய வைக்கின்றன.

பலரும் இப்படத்தை பெற்றோர் தமது பதின்வயது குழந்தைகளுடன் சென்று கட்டாயம் பார்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர்.  தாரளமாக சென்று பார்க்கலாம்.  பாலியல் குறித்த நல்ல புரிதல் உள்ள இளைஞர்க்கு இப் படம் பெரும் மொக்கையாகவே தோன்றும்.  இறுதிக் காட்சியில் பெண்ணுக்கு வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடப்பது போல காட்டி கற்பை(!) விட கர்ப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்காவது தமிழ் சினிமா வளர்ந்துள்ளதே என்பது ஆறுதல்..!!

7G-ரெயின்போ காலனியில் அனிதா கதிரிடம் ஹோட்டல் ரூமில், "i feel like doing it" என்று சொல்வாளே, அதுதாண்டா காதல்..!!
 

- அன்புடன்
- மலர்வண்ணன்

Monday 19 August 2013

பிக்கப் பண்ணியாச்சா..?!

பணியாற்றிய Rent A Car நிறுவனத்தில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு:

வழக்கம் போல், டிரைவர் காரை எடுத்துக் கொண்டு ஒரு ஏர்போர்ட் பிக்அப்-க்குச் சென்றார்.  அழைத்து வரப்பட வேண்டியவர் ஒரு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பதால் நன்கு அனுபவமுள்ள, சென்னை சாலைகளுக்கு வெகுவாகப் பழக்கப் பட்ட டிரைவரை அனுப்பியிருந்தார்கள்.

டிரைவரும் முன்னதாகவேச் சென்று டெர்மினலில் ப்ளகார்டுடன் காத்திருக்க ஆரம்பித்தார்.  வரவேண்டிய விமானம் வந்தடைய ஒவ்வொரு பயணியாக வெளியேற ஆரம்பித்தனர்.  கிட்டத்தட்ட பெரும்பான்மையான பயணிகள் வெளியேறிவிட்ட நிலையில் டிரைவருக்கு பயணியே போன் செய்கிறார்.


"நான் XXX கம்பெனியில் இருந்து AAA பேசுறேன்... எங்க இருக்க?"
"சார், நான் டெர்மினலில் பயணிகள் வெளிவரும் வாசலில் கரெக்டா நிக்கிறேன் சார்"
"உன் கையில பெயர்ப் பலகை இருக்கா?"
"சார் இருக்கு சார், நான்தான் சார் முன்னாடி நிக்கிறேன்"
"அதைக் கொஞ்சம் ஆட்டிக் காமி!!"
"சார், ஆட்டிட்டு இருக்கேன், தெரியுதா?"
"தெரியலப்பா"
"சார், நல்லா பாருங்க... ஒரு திட்டு மேல ஏறி நின்னு ஆட்டிட்டு இருக்கேன்"
"எனக்குத் தெரியல, நீ அங்கேயே நில்லு, நானே வர்றேன்.."

போன் கட் செய்யப் படுகிறது.  சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைக்கிறார்.


"நான் வாசலுக்கே வந்துட்டேன், நீ எங்க இருக்க?"

"சார், நானும் வாசல்ல தான் சார் நிக்கிறேன்..."
"ஏய், என்னப்பா சொல்ற? எங்கதான் இருக்க?"
"சார், நீங்க என்ன கலர் சட்டை போட்டிருக்கீங்க?"
"ப்ளு ஷர்ட், ப்ளாக் பேன்ட்; நீ?"
"சார், வெள்ளை சட்டை, டார்க் ப்ளு பேன்ட்!!"
"தெரியலப்பா"
"சார், எனக்கும் தெரியல சார்"
"சரி, நீ வை"
பயணி தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து அட்மினில் இருப்பவர்களை செம தள்ளு தள்ள அவர்கள், எங்கள் நிறுவனத்தின் கஸ்டமர் கேருக்கு அழைத்து தள்ள, அவர்கள் டிரைவரை அழைத்து தள்ள, டிரைவர் தெளிவாக தன் நிலையை விளக்க அது மீண்டும் பயணிக்கு பகிரப் பட்டது.  டிரைவருக்கு அடுத்த போன் வருகிறது.

"XXX கம்பெனில இருந்து பேசுறோம், எங்க GM ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கார். exact -ஆ எங்க இருக்கீங்க?"
"மேடம், நான் கரெக்டா arrival-ல நிக்க வேண்டிய இடத்துல நிக்கிறேன்.  கையில ப்ளகார்டை ரொம்ப நேரமா தூக்கிப் பிடிச்சிட்டு நின்னுட்டிருக்கேன்."
"அதுல மிஸ்டர் AAA பெயர் தானே போட்டிருக்கு?"
"ஆமா மேடம்"
"அதுல XXX கம்பெனி பெயர் தானே போட்டிருக்கு?"
"ஆமா மேடம்"
"சரி, அங்கேயே நில்லுங்க.. எங்கேயும் போயிடாதீங்க, மறுபடி கூப்பிடுறேன்"

டிரைவருக்கு மீண்டும் AAA அழைக்கிறார்.


"ஏய், எங்கதாம்ப்பா இருக்க?"
"சார், அங்கேயே தான் சார் இருக்கேன், ரெண்டு ப்ளு கலர் சட்டை போட்டவங்கக்கிட்ட கூட போய் விசாரிச்சுட்டு வந்துட்டேன் சார்"
"ஷிட் சர்விஸ் யா"
"என்ன சார்?"
"ஐ ஹவ் நெவர் எச்பெக்டட் திஸ்"
"எங்க சார் இருக்கீங்க..!!"
"ஹெல் மேன்.."
"சார், நான் வேணும்னா பார்க்கிங்ல வெயிட் பண்ணட்டுமா? வண்டி நம்பர் YYYY  YYYY க்கு வந்துடுறீங்களா?"
"புல் ஷிட்... ஐ ஹவ் ஹெவி லக்கேஜ் வித் மீ..."
"சார், எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க, என் போன் வேற பேட்டரி கம்மியா இருக்கு..!!"
"கிரேஸி பெக்கர்..."
"என்ன சார்?"
"ஹேய்... நீ இருக்கிறது டொமெஸ்டிக்கா, இன்டர்நேஷனலா?"
"சார், டொமெஸ்டிக் சார்"
"ஷிட்... நானும் டொமெஸ்டிக்ல தான் இருக்கேன்.., நீ ஒன்னு பண்ணு, அங்க ஒரு காபி டே இருக்கு தெரியுதா?"
"ஆமா சார்"
"அங்க வந்துரு; உடனே.."

இதற்குள் கஸ்டமர் கேரில் இருந்தது டிரைவருக்கு மீண்டும் "பிக்கப் பண்ணியாச்சா?" என்று அழைப்பு வர, "அவரை காபி டே-ல போய் பிக்கப் பண்ணிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு டிரைவர் அங்கு சென்றார்.  சில நிமிடங்களில் AAA வின் அழைப்பு...

"காபி டே வந்துட்டியா?"

"வந்துட்டேன் சார்"
"எங்க இருக்க?"
"வாசல்லயே இருக்கேன் சார்"
"ஷிட்... பொய் சொல்லாத, நானும் அங்க தான் இருக்கேன்.  நீ வேற எங்கேயோ மயிரப் புடுங்கிட்டு இருக்க"

"சார், அந்த மாதிரிப் பேசாதீங்க... நான் நீங்க சொன்ன இடத்துல தான் நிக்கிறேன்"
"இல்ல, நீ வேற எங்கேயோ *****ட்டு இருக்க"
"சார், அவ்வளவு தான் மரியாதை"
"என்ன பண்ணுவ, உன் மேல இன்னைக்கே கம்ப்ளைன்ட் பண்ணி என்ன செய்யுறேன் பாரு?"
"உங்களால என்னை ஒன்னும் செய்ய முடியாது"
"சரி, காபி டே-ல தானே நிக்கிற?"
"ஆமா"
"உன் பக்கத்துல ZZZ பேங்க் ATM இருக்கா?"

"இல்ல, VVV பேங்க் ATM தான் இருக்கு?
"டாம்ன்..., நீ முன்னபின்ன ஏர்போர்ட் போயிருக்கியா? ****கர்?
"நீ முன்ன பின்ன ப்ளைட்ல போயிருக்கியா?"
"சரி, நீ போய் பார்க்கிங்-ல இரு, நான் வந்துத் தொலையுறேன்.. அட்லீஸ்ட் சிட்டிக்கு உள்ளயாவது உனக்கு வழி தெரியுமா?"
"எங்க போகணும்?"
"எலெக்ட்ரானிக் சிட்டி"
"அது, பெங்களூராச்சே..!!"
"நீ எங்க இருக்க?"
"சென்னை....!!!"
 

- அன்புடன்
- மலர்வண்ணன்

Friday 16 August 2013

மூன்று பேர்; இரண்டு காதல்

இந்த வாரத்தில் ஒருநாள் அலுவல் குறித்து காரைக்கால் செல்ல வேண்டியிருந்த படியால் சென்னையிலிருந்து அதிகாலையில் கிளம்பி பஸ்ஸில் பாண்டிக்குச் சென்று அங்கிருந்து காரில் காரைக்கால் சென்று வேலையை முடித்து மாலை பாண்டி பஸ் நிலையத்தில் வந்து இறங்கி சென்னை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்த பொழுது மணி 6.  இது இந்த பதிவுக்கு தேவையில்லாத விபரம்... நிற்க வேண்டாம்... மேலே...

பஸ்ஸில் அப்போதைக்கு என்னுடன் சேர்த்து ஏழெட்டு பேர் தான் இருந்தனர்.  ECR வழி என நினைத்து வலதுபுறம் சன்னலோரம் அமர்ந்தேன், ஆனால் வண்டி திண்டிவனம் வழி போனது வேறு கதை.  20 அல்லது அதிகபட்சமாக 21 வயது நிரம்பிய ஒரு பெண்ணும் பையனும் ஏறி எனக்கு இடது புறம் முந்தின சீட்டில் அமர்ந்தனர்.  பெண் பயணிப்பவள், பையன் வழியனுப்ப வந்தவன் என்று பார்த்தவுடன் தெரிந்தது.  இருவரும் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டும், சீண்டிக்கொண்டும், மேலோட்டமாக(!!) தழுவிக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் இருந்தனர்.  உள்ளுக்குள் இவர்களை வேடிக்கை பார்ப்பது சரியல்ல என்று பட்டாலும், மிக அருகில் நடக்கும் நிகழ்வாகையாலும், குறுக்கில் வேறு யாரும் இல்லாததாலும் நிழல் போன்ற அசைவுகள் மூலம் அவர்களின் இயக்கங்கள் மூளைக்குள் படம் போட்டு காட்டின.
 

வெயில் தடுப்பு காகிதம் ஒட்டப்பட்டு உள்ளே நடப்பது ஏதும் வெளியே தெரிய வாய்ப்பில்லாமலிருந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக இருக்கைகள் நிறைய ஆரம்பித்தன.  கைக் குழந்தையுடன் வந்த தம்பதிகள் நேரே என்னிடம் வந்து "சார் கொஞ்சம் முன்னாடி மாறி உக்காந்துக்குறீங்களா?"-ன்னு கேட்டனர்.  பஸ்ஸில் இன்னும் சில பேர் ஒற்றையாக உக்காந்திருக்க கரெக்டா ஆளைக் கண்டுபிடிச்சு எப்படித்தான் வந்து கேக்குறாங்களோ?  அவங்க நம்மளத்தான் அப்ரோச் பண்ண வர்றாங்கன்றத தெரிஞ்சு டெரர்றா இருக்கணும்னு முயற்சி பண்ணாலும்  நம்ம மூஞ்சி இன்னும் பிஞ்சாவே மத்தவங்களுக்குத் தெரியும் போல!!  எந்திருச்சி எடம் கொடுக்கலன்னா குழந்தைய விட்டு அடிக்கச் சொல்லிடுவாங்க போல இருந்த படியால் எழுந்து முன் சீட்டில் சென்று அமர்ந்தேன்.  இப்போ அந்த இளஞ்ஜோடிகள் எனக்கு மிக அருகில்.

கையில் பாட்டில், டம்ளர் சகிதம் இரு நடுவயது நாளைய பாரதங்கள் லேசான தள்ளாட்டத்துடன் ஏறின.  நடத்துனர் "ஏம்பா, இது bar கிடையாது, எறங்கு"ன்னு சொல்ல பிளாஸ்டிக் டம்ளர்களை தூக்கியெறிந்து விட்டு, "குடிக்கல"ன்னு சொல்லிவிட்டு பின் சென்று அமர்ந்தனர்.  நடத்துனர் மீண்டும், "இது ஏசி பஸ், நீங்க குடிச்சிட்டு வந்து ஏறினா, மத்தவங்க எப்படி நாத்தத்தைப் பொறுத்துக்கிட்டு கூட வருவாங்க, இறங்குங்க"ன்னு சொல்ல; அந்த சிங்கங்கள், "எறங்க முடியாது, உன்னால ஆனதை பாத்துக்கோ, எங்களை முடிஞ்சா இறக்கிக் காட்டு" என சித்திரைத் திருவிழாவில் "முடிஞ்சா வழக்குப் போடுங்க"ன்னு சொன்ன தலைவர் மாதிரி சவால் விட்டனர்.  நடத்துனர் சிரித்துக் கொண்டே டிக்கெட் போட ஆரம்பித்தார்.

இப்போது அந்த ஜோடிகளை நன்கு கவனித்தேன்.  பார்ப்பதற்கு இருவருமே நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல் இருந்தனர். நல்ல அழகுடன் பொருத்தமாகவே இருந்தனர்.  நாடகக் காதல் போல் தெரியவில்லை; அப்பெண்ணும் ஜீன்சுக்கும், கூலிங்கிளாசுக்கும் மயங்குபவள் போலும் இல்லை.  நாற பரம்பரை, நோண்ட பரம்பரை, நொங்கு பரம்பரை என்று காட்டு விலங்குகளின் படங்களை ப்ளெக்ஸ் பேனரில் அடித்துக் கொண்டு திரியும் கூட்டம் இவர்களைப் பிரிக்காமலிருப்பார்களாக என நினைத்துக் கொண்டேன்.  வண்டி நகர ஆரம்பித்தது... பையன் பிரியாவிடை கொடுத்து இறங்கினான்.  நடத்துனர் இன்னொரு பெண்ணை அங்கு அமர்த்த முயற்சிக்க இவளோ "ஆள் வரும்" என்று சொல்லிவிட்டாள்.

பஸ், நிலையத்தை விட்டு வெளியே வந்து ஒரு திருப்பத்தில் திரும்பி நின்றது.  சீருடையில் இரு காவலர்கள் ஏறி நேரே நமது சிங்கங்களிடம் சென்று இறங்கச் சொன்னனர்.  "டிக்கெட் வாங்கியிருக்கோம்"ன்னு சிங்கங்கள் ரூல்ஸ் பேச, "வாங்க, வேற வண்டியில அனுப்பி வைக்கிறோம்"ன்னு காவலர்கள் கொஞ்சியழைத்தும் எழ மறுத்தனர்.  பிறகென்ன... பொத்.. பொத்தென்று இருவருக்கும் பின்னங்கழுத்தில் சில-பல பட்டாயா, கோட்டக்கல் மசாஜ் செய்து பிடரியைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.  "சார், அடிக்காதீங்க..சார், அடிக்காதீங்க..சார்!!" என்ற வசனத்தையே இருவரும் திரும்பத் திரும்ப சொல்லியபடி ரிங் மாஸ்டர்கள் உடன் இறங்கினர்.

நடத்துனர், "ஏம்மா இன்னுமா ஆள் வரல" என்று கேட்க அவள், "வருவாங்க.." என்று சொல்லிக் கொண்டே பரபப்புடன் நாட்டுக் கோழி தீனி பொறுக்குவதைப் போல செல்போனை நோண்டிக் கொண்டே எழுந்து நின்று வெளியே கண்களை ஓட விட்டாள்.  அடுத்த திருப்பத்தில் வண்டியை நிறுத்தி இவள் வயதையொத்த வேறொரு பையன் ஏறினான்.  அவனைக் கண்டதும் புன்னகையுடன் இவள் அமர, அவனோ உடனே உட்காராமல் அடுத்த ஏரியாவிற்கு போன தெரு நாயாக பம்மிக் கொண்டே இருபுறமும் நோட்டம் விட்டபடி சிறிது நேரம் கழித்து அவளருகில் அமர்ந்தான்.  சரி, உடன் படிப்பவனாகவோ, உடன் வேலை செய்பவனாகவோ, நண்பனாகவோ, சகோதரனாகவோ இருக்கலாம் என நினைத்தேன்..

பஸ், டோல் பிளாசா தாண்டியதும் உள்ளே இருந்த விளக்குகள் அணைக்கப் பட இயர் போனை எடுத்து காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தேன்.  கட்டணக் கழிப்பறையில் ஒட்டியிருக்கும் பிட் நோட்டீசில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் இருப்பது போல்  பக்கத்து சீட் பையன் நெளிந்து கொண்டிருக்க, என்னதான் செய்யுறான் இவன் என்று பார்வையை ஓட்டினேன்.  பையன் # 1 என்னவெல்லாம் செய்து விட்டுச் சென்றானோ அதே வேலைகளை பையன் # 2 தொடர்ந்து செய்து கொண்டிருந்தான்..!! அவளும் தான்..!! "இருட்டு பஸ்ஸில் முரட்டு கிஸ்ஸு"-ன்னு ஒரு தனி பதிவே போடும் அளவிற்கு கமல்ஹாசனுக்கே சவால் விட்டுக் கொண்டிருந்தனர்.


"காதல்ன்றது செடியில ஒரே முறை பூக்குற பூ மாதிரி; மரத்துல காய்க்கிற காய் மாதிரி; தட்டுல நக்குற நாய் மாதிரி; சந்துல நிக்குற பேய் மாதிரி; கமுந்து படுக்கிற பாய் மாதிரி"ன்னு வசனம் எழுதுறவன் எல்லோரையும் நினைக்க, அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.  பலருடன் காதல் வரலாம்.. தப்பில்லை, அது இயல்பு; பலருடனும் ஒரே நேரத்தில் எப்படி வருகிறது??  அதுவும் 10 நிமிட இடைவெளியில் அடுத்த ஆளா..!!

அவளைக் குறை சொல்வதா? அந்தப் பசங்களைக் குறை சொல்வதா? அச் செல்வங்களைப் பெற்றெடுத்தவர்களை குறை சொல்வதா? சம்பளத்திற்கு மட்டும் வேலை பார்க்கும் பல நவீன வாத்திகளை குறை சொல்வதா? என்னைப் போல் வேடிக்கை பார்த்த சமூகத்தை குறை சொல்வதா?  மீண்டும் கண்களை மூடி இசையை ரசிக்க ஆரம்பித்தேன்...
"ஆதலால்... ஆதலால்... காதல் செய்வீர்..." என யுவன் ஷங்கர் ராஜா உச்சஸ்தாயில் பாடிக் கொண்டிருந்தார்..!!



- அன்புடன்
- மலர்வண்ணன்

Sunday 11 August 2013

எனக்கும் "அது" வந்திடுச்சி...!!

     10.08.2013 அன்று அதிகாலை சுமார் 6 மணிக்கு இரைச்சல் இல்லாத சாலை, இருட்டிக் கொண்டு மேக மூட்டத்துடன் வானம், தென்காசித் தூறல்... சென்னையில் தான் இருக்கிறோமா என்பதை நம்பவே முடியவில்லை.  இரு சக்கர வாகனத்தில் அம்மணியுடன் படகில் போவது போல முகத்தில் சாரல் அடிக்க மெதுவாக சென்று கொண்டிருந்தேன்.  இதுபோன்ற  மிதமான தூறல் முகத்தில் அறைந்த படி செல்வது சென்னையில் மிக அபூர்வம்.  அதைக் கூட அனுபவிக்கத் தோன்றாமல் சில ஜீவராசிகள் குடை, ஜெர்கின் சகிதம் சென்று கொண்டிருந்தன.  சில தேநீர்க் கடைகளிலும், பஸ் நிறுத்தங்களிலும் தஞ்சம் புகுந்திருந்தன.
      விடுமுறை, அதுவும் மழையுடன் கூடிய விடுமுறை.. இழுத்துப் பொத்திட்டு ...ச்சே... போர்த்திட்டு படுக்காம  காலங்காத்தால அம்மணி கூட அப்படியெதுக்கு சவாரி போனேன்னா... நிற்க!! 

     வருடம் 2008.  அப்போது வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தின் தயவால் உடலை முழு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டேன்.  அதன் பிறகு அதற்குண்டான தேவை இருக்கவில்லை.  சென்ற மாதம் அம்மணியின் பெரியப்பா கேன்சரால் இறந்ததைத் தொடர்ந்து, அம்மணி இருவரும் வாத்தியார் பரிசோதனை (அதாங்க master check-up) செய்து கொண்டே ஆக வேண்டும் என்ற நச்சரிப்பு.  போதாக் குறைக்கு இறப்பிற்கு வந்த உறவினர்களுள் மருத்துவர் ஒருவர் என்னிடம், "மலர், இந்த வயசுக்கப்புறம் (அப்படியென்ன நமக்கு வயசாயிட்டு..!!)  நீங்க ரெண்டு பேரும் வருடம் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டே ஆக வேண்டும்.." என்று அம்மணி முன்னாலேயே அறிவுறுத்தினார்.  இது போதாதா?  காகம் கரையும் முன்னர் (சென்னையில் சேவல் இல்லீங்க) எழுப்பி விடப்பட்டு சென்று கொண்டிருந்தோம்.

     டீ குடித்தால் நன்றாயிருக்கும் போலத் தோன்றியது.  வெறும் வயிற்றில் வரவேண்டும் என்று சொல்லியிருந்த படியால் எட்டு ரூபாய் மிச்சமானது.  நந்தம்பாக்கத்தில் உள்ள பழைய, பிரபல மருத்துவமனையை சென்றைடைந்தோம்.  உள்ளே மாணவிகளுக்கான இறைவணக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  இருட்டாக இருந்த வரவேற்பறையில் முதல் ஆளாக சென்று அமர்ந்தோம்.  அடுத்த சில நிமிடங்களில் வயிற்றை இறுக்கிப் பிடித்தபடி ஒரு பெண் அருகில் வந்து அமர அவர் கணவர் ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு பின்னாலே வந்தார்.  அப்பாடா... ஒரு hospital feeling வந்து விட்டது.

    
     Master check-up offer ஒருத்தருக்கு 2000 ரூபாய்.  ஆடி மாசம், ஜோடியா வந்தா ஏதும் discount உண்டா எனக் கேட்கத் தோன்றி அடக்கிக் கொண்டேன்.  ஒரு மாறுதலுக்கு பெயர் கொடுப்பது, பணம் கட்டுவது, ரசீது வாங்குவது, ஒவ்வொரு பரிசோதனைக்கும் எங்கெங்கு செல்வது, யாரைப் பார்ப்பது போன்ற அனைத்து வேலைகளையும் அம்மணியே செய்தார்.  சாதாரண நாட்களில் ஹோட்டலில் உப்பு வேண்டுமென்றால் கூட சர்வரிடம் நான் தான் கேட்டு வாங்கித் தர வேண்டும்.  இரத்தம்-சிறுநீர் எடுத்துக் கொண்டு, மீண்டும் காலை சிற்றுண்டியை முடித்து இரண்டு மணி நேரத்திற்குள் வரச் சொல்லினார்கள்.  தொடர்ந்து X-ray மற்றும் ECG எடுக்கப் பட்டது.  Scan செய்யும் மருத்துவர் 10 மணிக்கு தான் வருவார் என்பதால் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் சென்றோம். 

      மழை இன்னும் விடாமல்
லேசாக தூறிக் கொண்டிருந்தது.  ஆனால் முழுமனதுடன் ரசிக்க முடியவில்லை.  11 மணி வாக்கில் மீண்டும் ஒரு முறை இரத்தம் கொடுத்துவிட்டு Scan-க்குச் சென்றோம்.  CT மற்றும் Echo எடுக்கப் பட்டது.  நுரையீரலும் கல்லீரலும் எந்த கதியில் இருக்கிறதோ என பதட்டத்துடனே இருந்தேன்.  Scan செய்த பெண் டாக்டர்  ரொம்ப தோழமையுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே எடுத்தார்.  முடிவில் "ஒன்றுமில்லை, எல்லாம் நார்மலாக இருக்கிறது.." என்று சொல்லி பதட்டத்தைப் போக்கினார்.  அனைத்தும் இருவரின் உடலும் நல்ல நிலையில் இருக்கிறது என்று சொல்லி விட்டன.  அடுத்து இரத்தம் மற்றும் சிறுநீருக்கான பரிசோதனை முடிவு கொடுக்கும் இடைப்பட்ட நேரத்தில் வங்கிக்குச் சென்று வந்தேன்.


     இந்தப் பரிசோதனை முயற்சிக்கு அம்மணி ஏன் அதிகம் அக்கறை காட்டினார் என்றால்... முதலாவது,  அவர் அம்மா அப்பா இருவருக்கும் சர்க்கரை வியாதி இருப்பதால் தனக்கும் வந்துவிடுமோ என்ற உணர்வு; ரெண்டாவது, கடந்த பல வருடங்களாக மாதம் இரு முறையாவது (கடந்த சில மாதங்களாக சுத்தமாக இல்லை...) பார்ட்டி சென்று கொண்டிருந்த மணாளனின் உள்ளுறுப்புகள் உருப்படியாக இருக்கிறதா, இல்லை இன்சூரன்ஸ் ஏதும் அதிகப் படியாக எடுக்க வேண்டியிருக்குமோ என்ற அக்கறை தான்..!! 

     இடைப்பட்ட நேரத்தில் "உனக்கு சுகர் இருப்பதற்கான வாய்புகள் அதிகம்; இனி ராகியும், கம்பும் மளிகை லிஸ்டில் அரிசிக்குப் பதில் சேர்ந்து விடும்" என்று கலாய்த்துக் கொண்டிருந்தேன்.  முடிவு வந்தது....  அம்மணியின் ரிசல்ட் ஒரு குறையும் இன்றி பக்காவாக இருந்தது.  Scan report கொடுத்திருந்த தெம்பில் அலட்சியமாக என்னுடையதைப் பிரித்துப் பார்த்தோம்.  இரத்தத்தில் சர்க்கரையுடன் கொழுப்பும் ஏகத்துக்கு ஏறிக் கிடந்தது.  கடைசியில எனக்கும் "அது" வந்திடுச்சி...!! அப்போ ராகியும் கம்பும் கட்டாயம் வாங்கித்தான் ஆக வேண்டும் போல என் மனதிற்குள் ஓடியது.
 

     மருத்துவரைச் சென்று பார்த்தோம்.  ஒரு சில எளிய உணவுமுறை மாற்றங்களைப் பற்றி சொன்னார்.  தவிர்க்க வேண்டியவை, சேர்க்க வேண்டியவை, மாற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் பற்றி சொன்னார்.  நான் ரொம்ப ஆர்வமாக, "அப்போ மருந்து சாப்பிட தேவையில்லையா" என்று கேட்டேன்.  அவரோ, "நான் சொன்னத follow பண்ணலன்னா தான் தேவைப் படும்"ன்னு சொல்லிட்டார்.  என்னடா இது! மருந்து எழுதிக் கொடுக்காத டாக்டர் ஒரு டாக்டரா? என ஆச்சரியப்படலாம்.  ஏன்னா, அந்த டாக்டர் என்னோட மச்சான்..!!

     இப்போ அம்மணி வீட்டுல என்னை செல்லமா கூப்பிடுற பேரு..."சக்கரை..."!!



- அன்புடன்
- மலர்வண்ணன்

Thursday 20 June 2013

இவாலியாவுடன் ஓர் இரவு


Nissan-ல் Evalia என்ற புது SUV-யை commercial vehicle category-யாக முன்னிலைப் படுத்தும் அறிமுகம் ஜூன்'19 அன்று சென்னை தாஜ் கொரமன்டலில் நடந்தது.  Innova-வை விட சிறந்த வண்டின்னு சொன்னதாலும், Nissan-லிருந்து என்ன்ன்னையும்... மதித்து அழைப்பிதழ் அனுப்பியிருந்ததாலும் ஜப்பான்காரன் என்னதான் செய்திருப்பான்னு  பாக்கலாம்னு போனா, ஊர்ல இருந்த அத்தனை travels-க்கும் அழைப்பிதழ்கள் போயிருக்கும் போல...  அரங்கம் நிறைந்து காணப் பட்டது.  அதில் இருந்த followed by cocktail dinner-ன்ற வாசகம் தான் நிறைய பேரை அங்கே இழுத்து வந்திருக்க வேண்டும்.

மாலை 7:30க்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வு தவறாமல் மிகச் சரியாக இரவு 8:20க்கு ஆரம்பித்தது.  சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்ற தமிழனின் தன்னம்பிக்கைக்கு ஏற்ப Nissan-ல் வேலை பார்க்கும் வட இந்திய சேட்டு பசங்க Evalia-வின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல ஆரம்பிக்க, நம்ம ஆளுங்க வழக்கம் போல சொல்போனில் பிஸியானார்கள்.  Mileage மற்றும் விலையைத் தவிர Innova-வை விட Evalia ஒன்றும் சிறப்பாகத் தெரியவில்லை.  ரோட்டுக்கு வரட்டும்... பார்க்கலாம்...

Dealer-களை ஓரிரு வார்த்தைகள் பேசச் சொன்னார்கள்.  முதலில் பேச வந்த தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடை பரப்பியிருக்கும் ஒரு பிரபல dealer, "Good evening, எல்லாருக்கும் வணக்கங்க.., என் பேரு Elephant Hill..., basically நான் ***** (தன் சாதி), mortar drink-ஐச்  சேர்ந்த *******(சாதியின் உட்பிரிவு)" என்று பேச ஆரம்பித்தார்.  "இப்போல்லாம் யாருங்க சாதி பாக்குறா" என்று பேசும் அப்பாவிகளை நொந்து கொண்டேன்.  ஒரு metropolitan தலைநகரில், 5ஸ்டார் ஹோட்டலில், corporate meeting-ல், சாதி பேரைச் சொல்லி ஒட்டு பொறுக்கும் அரசியல்வாதிக்கு சற்றும் இளைக்காமல், சாதி பேரைச் சொல்லி வணிகப் பிச்சை கேட்ட  கொடுமையைக் காண நேரிட்டது.  Evalia வாங்குறனோ இல்லியோ, உங்கிட்ட கம்மர்கட் கூட வாங்கக் கூடாது என முடிவு செய்தேன்.

இரவு 9:40க்கு "bar counter-ம் buffet-ம் திறந்தாச்சு, have a nice time" என்றார்கள்.  தற்காலிகமாக நான் மதுவை ஒதுக்கியிருந்ததால் buffet ஏரியாவை நோக்கிச் சென்றேன்.  Bar counter-ஐக் கடந்து செல்லும் போது நான் கண்ட காட்சி... ஆஹா... அற்புதம்...!!  நாளை முதல் தமிழகத்தில் சாராய விற்பனை கிடையாது என்ற அறிவிப்பி
ற்கு முந்தின நாள் இரவு எப்படியிருப்பார்களோ, அப்படி இருந்தார்கள் நம் தமிழ்கூறும் நல்லுலகத்தினர்.  தீபாவளிக்கு முதல் நாள் இரவில் ரங்கநாதன் தெருவில் முட்டி மோதுபவர்கள், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் எக்கி எக்கி டிக்கெட் போடுபவர்கள்,  எழும்பூர்-சென்ட்ரலில் போராடி இடம் பிடிப்பவர்களை விட திறமையுடனும், விழிப்புடனும், நம்பிக்கையுடனும் "சிந்துபைரவி" சிவக்குமாருக்கு சவால் விடும் வகையில் கைகளில் குவளைகளை ஏந்தியபடி, ஒருவரையொருவர் முண்டியடித்தபடி இருந்தனர்.

Buffet ஏரியா காலியாக இருந்தது...  நமக்கு spoon, fork ஒத்து வராது... சரி, கை கழுவி விட்டு வருவோம் என வாஷ் ரூம் சென்று திரும்பி வந்து பார்த்தால் பந்தியில் ஒரு பெரிய படையெடுப்பு நடந்து கொண்டிருந்தது.  வரிசை கிடையாது... எதிரெதிர் திசையில் தட்டை ஏந்திக் கொண்டு வதம் செய்து கொண்டிருந்தனர்.  தட்டைக் கண்டுபிடித்தேன்.  சிக்கன் டிக்கா, மட்டன் வறுவல், மீன் குழம்பு இருந்த பாத்திரங்கள் கும்பலாக கற்பழிக்கப் பட்டுக் கொண்டிருந்தன.  Veg Salad-ம் தயிர் வடையும் மட்டுமே free-யாக இருந்தன.  அவற்றிற்கு நான் ஆதரவு தந்தேன். 

இது போன்ற புதிய automobile அறிமுகங்களின் போது தங்களிடம்  தொடர்ந்து வணிகம் செய்யும் நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ மட்டுமே அழைப்பு விடுக்கப்படும்.  மருந்து கம்பெனிகள் மருத்துவர்களுக்கு அளிக்கும் விருந்துக்கு சற்றும் குறைவில்லாமல் இவ்வகை corporate business meet இருக்கும்.  அழைப்பிதழைக் காட்டினால் மட்டுமே அனுமதிக்கப் படுவர். Toyota Fortuner அறிமுகம் Taj Fishermen's Cove-ல் வைத்து நடத்திய போது ரஷ்ய அழகிகளை, உடையவன் மட்டும் கொண்டாடும் அழகை  தடைகள் போட்டு ஆட விட்டு அழகு சேர்த்தனர். IPL cheer leaders எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

தற்போது நடந்த event-ல் யாரிடமும் அழைப்பிதழ் கேட்கப் படவில்லை.  சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த கூட்டத்திற்கு துளியும் சம்பந்தம் இல்லாத நான்கைந்து பெண்கள் தாங்கள் Pre-KG படிக்கும் போது வாங்கிய உடைகளை போட்டுக் கொண்டு அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தனர்.  சில நிமிடங்களில் முகத்தில் வளையங்களும் உடம்பில் பச்சையும் குத்தி இருந்த சில இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து கொண்டனர். அவர்களின் தீர்த்தவாரி தனி ஆவர்த்தனமாக  ஆரம்பிக்க மற்றவர்களுக்கு ஊறுகாய் இல்லாத குறை தீர்ந்தது.

அப்பொழுதான் தான் கவனித்தேன், அதில் இருந்த ஒரு பெண் இதற்கு முன் ஏற்கனவே இது போன்றதொரு நிகழ்வில் தன் குழுவினருடன் தாகசாந்தி செய்து கும்மாளமிட்டது  நினைவிற்கு வந்தது.  உடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நண்பர் அதிலிருந்த வேறு ஒரு பெண்ணைக் காட்டி அவள் பெயரையும் சொல்லி "நானும் அவளும் இதற்கு முன் ஒன்னா வேலை பார்த்தோம்.  இவளுங்களுக்கு இதே வேலை தான்..., எந்த ஹோட்டல்ல ஓசில cocktail dinner நடந்தாலும் கரெக்டா வந்துருவாளுங்க, இவளுங்க தோரணையைப் பார்த்து எவனும் கேட்கவும் மாட்டான்." என்றார்.  சிறிது நேரத்தில் பத்து பெண்களுக்கு மேல் அந்த கூட்டத்தில் இருந்தனர்.  Boys படத்தில் செந்தில் இரண்டு பாத்திரங்களைக் கொடுத்து "ஒன்னு உனக்கு, இன்னொன்னு எனக்கு" என்று சொல்லுவாரே... அது போல அந்த பசங்கள் அடிச்சு பிடிச்சு வாங்கி கொண்டு வரும் கிளாஸ்களில் ஒன்றை தங்களிடமும் மற்றொன்றை அந்த வளர்ந்த குழந்தைகளிடத்திலும் கொடுத்து அழகு பார்த்தனர்.   

ஒரு ஓரத்தில் தோசை counter கூட்டம் இல்லாமல் இருந்தது. அதை நோக்கி நடந்து சென்றேன்.  எங்கிருந்துதான் வருவானுங்களோ...!!  நான் counter-ஐ அடையும் முன் 20 பேர் அங்கிருந்தனர்.  ஒரு கணம் நாமிருப்பது எதியோப்பியா-சோமாலியாவா அல்லது சென்னையின் மிகப் பெரிய பணக்கார ஹோட்டலா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. கையைக் கழுவினேன்...

கிளம்பி வெளியே வந்த பொழுது லாபியில் எதிரில் இரு பெண்கள் வந்தனர்.  அவர்களில் ஒருத்தி "what, Nissan huh?, i "m coming..." என்று பேசிக் கொண்டே போனாள்.  அப்போது இரவு மணி 10:30.  புதுப்பேட்டையில் கொக்கி குமார், "உங்களையெல்லாம் வீட்ல தேட மாட்டங்க?" என்று கேட்கும் காட்சி கண்முன் வந்து போனது.  கெட்டாலும் மேல்தட்டு மக்கள் மேன் மக்களே..!!"

வீட்டிற்கு போகும் வழியில் டிரைவரிடம் "உங்களை சாப்பிட சொன்னேனே, சாப்பிட்டீங்கள?" என்று கேட்டேன்.  "இல்ல சார்" என்றார்.  "எங்காவது ரோட்டு கடையில நிறுத்துங்க.. ரெண்டு பேரும் சாப்பிட்டு போலாம்" என்றேன்..!!

Saturday 15 June 2013

உலு(ரு)க்கும் பாடல்கள்: பாகம் - 3


உலு(ரு)க்கும் பாடல்கள் முதல் பாகத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
உலு(ரு)க்கும் பாடல்கள் 2-ம் பாகத்தைப் பார்வையிட இங்கே சொடுக்கவும்
 
80-களில் தமிழ்த் திரையிசையை என்னைப் போன்ற சங்கீத ஞானம் அற்ற சாதாரண ரசிகர்கள் மூன்றாகப் பிரித்துப் பார்ப்பார்கள்.  மெலடி, டப்பாங்குத்து மற்றும் டிஸ்கோ.  ராஜாவின் ராஜ்ஜியம் கோலோச்சிக் கொண்டிருத்த காலம். அவர் வாசித்தார்... ரசிகர்கள் யாசித்தார்கள்...  இளையராஜா இசையமைத்த பல பாடல்களில் ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பார்.  அதை அவரே எப்போவாது சொன்னால் தான் நமக்கு "ஓ.. இதுல இப்படி ஒன்னு இருக்கோ"ன்னு தோணும். உதாரணமாக "ராகம் ரசமெயே வேதமாய்" என்ற தெலுங்குப் பாடலில் "ச, ரி, க" என்னும் மூன்று ஸ்வரங்களை மட்டுமே உபயோகப் படுத்தியிருப்பார்.  "ராஜா.. ராஜாதி ராஜன் இந்த" பாடல் முழுவதும் ட்ரம்ஸ் மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கும், இரண்டாவது interlude-ல் rhythm. இது போன்று சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழ்த் திரை இசையில் கர்னாடிக் சங்கீதம் பெரும்பங்கு வகித்திருந்தாலும் அதை அனைவரும் ரசிக்கும் வகையில் தாலாட்டு, நாட்டுப்புற, கஜல், மேற்கத்திய, இன்னபிற வகையுடன் குழைத்து MSV, இளையராஜா போன்றவர்கள் அளித்து வந்துள்ளனர்.  90களுக்குப் பிறகு ரஹ்மான் வித்தியாசமாக ஆப்ரிக்கன், அரபிக், அல்ஜீரிக் வகை பாணியை இணைத்து பல பாடல்களை ஹிட்டடித்துள்ளார்.  "அரபிக் கடலோரம்", "ஸ்ட்ராபெர்ரி கண்ணே", "முக்காபுலா", "அடியே.. எனை", "காதல் நயகரா" போன்ற பல பாடல்களை சொல்லலாம்.  தமிழ்த் திரையிசையில் hip hop, jazz, blues, pop, country, folk, rhythm & blue, rock, ska போன்ற genre-க்கள் ரஹ்மான் வரவிற்குப் பிறகு அதிகளவில் உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன.

Rock-ல் alternative rock என்றொரு வகை உண்டு.  நம்ப வசதிக்கு இதை slow rock என்றும் வைத்துக்  கொள்ளலாம். ஆங்கிலப் பாடல்களில் என்னை வெகுவாகக் கவர்ந்தது இந்த slow rock genre தான்.  Phil Collins, George Michael, The Eagles, Stevie Wonder, Michael learns to Rock, Richard Marx, Foreigner, Elton John போன்றவர்கள் இந்த slow rock-ல் பட்டையைக் கிளப்பியவர்கள்.

இப்பதிவில் நான் பகிரப் போவது இளையராஜா இசையமைத்த "fast melody duets" பற்றி!! அதென்ன fast melody? எனக்கு இதற்கு சங்கீதப் பூர்வமாக விளக்கம் சொல்லத் தெரியாது... காதல் பாடல்கள் என்றாலே இயக்குனர்  மற்றும் ரசிகர் விருப்பம் மெலடியாகத்தான் இருக்கும். அதிலேயே சற்று tempo-வை ஏற்றி சுறுசுறுவென கொடுத்தால் எப்படியிருக்கும்?!  பாடலின் பல்லவி, அனுபல்லவி, சரணம் அனைத்திலும் ஒரு சறுக்காத வேகம்!!  Interlude-லும் அதே பரபர தேடல்.  அதுதான் fast melody.  சொன்னால் விளங்காது; அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.  உணர்ந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்.

இதில் நாயகன் நாயகியை ஸ்லோ மோஷனில் மரத்தைச் சுற்றி ஆடுவதை தவிர்த்து தடதடவென ஓடி ஆட விடலாம்.  துணை நடிகைகள் மகாபலிபுர சிற்பங்களின் உடையில் வந்து மலர் தூவ வேண்டாம். இயக்குனர்கள் "i want more emotion.." என்று தொங்க தேவையில்லை.  தயாரிப்பாளரின் வசதிக்கேற்ப set போட்டும் எடுக்கலாம், outdoor-லும் எடுக்கலாம்.  பாடல்களுக்குள் செல்வோம்...

Fast melody வகைப் பாடல்களை நான் கண்டு கொண்டு, பிரித்து ரசிக்க ஆரம்பித்தது இந்தப் பாடலை கேட்ட பின்பு தான்.  படம்: சத்யா, பாடியவர்கள்: SPB & லதா மங்கேஷ்கர், பாடல்: "வளையோசை கலகலவென"""
புல்லாங்குழலினூடே ஆரவாரமில்லாமல் ஆரம்பிக்கும் இப்பாடல் இறுதி வரை மிதமான அலைகள் மீண்டும் மீண்டும் நம்மிடையே வந்து ஆர்ப்பரிப்பது போல இருக்கும். குறிப்பாக இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் "லா...ல...லா...ல...லா...லா..."!!  லதா மங்கேஷ்கரின் உச்சரிப்பு சரியாக இராது என்றாலும் அமலாவின் குழந்தைத்தனமான சில்மிஷங்களுக்கு சரியாக செட் ஆகும்.  இப்பாடலில் கமல் அமலாவின் உதட்டில் சேலையைப் போர்த்தி முத்தமிடும் காட்சி செம...!!  இன்று வரை பல படங்களில் நாயகன் நாயகி பஸ்ஸில் செல்லுமாறு காட்சி வந்தால் இந்தப் பாடலையே பின்னணியாக பயன்படுத்துகின்றனர்.


இன்று மொட்டைத் தலையுடன் டிவியில் சமையல் செய்து கொண்டிருக்கும் அன்றைய கோடம்பாக்க சாக்லேட் பையன் சுரேஷ், நளினி & சாதனாவுடன் இணைந்து நடித்த(!!) ஒரு த்ரில்லர் "உன்னைத் தேடி வருவேன்".  பாடல்: "என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்",  பாடியவர்கள்: SPB & S.ஜானகி
வேகமாகச் செல்லும் தெளிந்த நீரோடையில் பயணம் செய்வது போல இப்பாடல் உங்களை அழைத்துச் செல்லும்.  இரண்டு சரணங்களும் முடியும் தருவாயில் "வா... அன்பே அன்பே அன்பே வா...." என்ற இடம் உச்சகட்டம்.


ஜேம்ஸ் பான்ட்  மாதிரியே படம் எடுக்கணும்னு கமல் கையை சுட்டுக் கொண்ட படம் விக்ரம்.  ஜேம்ஸ் பான்ட்  படத்தில் வருவது போல மூன்று கதாநாயகிகள், ஆயுதக் கடத்தல், தேசப்பற்று, வேற்றுமொழி, பழிவாங்கல் போன்ற சமாச்சாரங்கள் இதிலும் இருந்தன.  சுஜாதாவின் கதை-வசனம்.  இருந்தும் படம் ஊத்திக் கொண்டது.   கமல் ரசிகர்கள் வேண்டுமானால் இப்படத்தை கமல் அட்வான்சாக எடுத்ததால் மக்களுக்கு புரியாமல் தோல்வியடைந்தது என்பார்கள்.  ஆனால் இதற்கு முன்பு வந்த "the spy who loved me", "moon raker", "for your eyes only" உள்ளிட்ட ஜேம்ஸ் பான்ட் படங்கள் மொழி புரியாமலே தமிழ்நாட்டில் ஹிட்டடித்தவை.  ஜேம்ஸ் பான்ட் பட பாணியிலேயே எடுக்கப் பட்ட title பாடலான "விக்ரம்...விக்ரம்..." முதன் முதலாக techno mix செய்யப் பட்டு rap style-ல் வந்த பாடல்.  "மீண்டும் மீண்டும் வா" சரியான hot, hotter, hottest!!  நம்ம fast melody "வனிதாமணி வனமோகினி வந்தாடு..."  பாடியவர்கள்: SPB & S.ஜானகி
பாடலின் ஆரம்பத்தில் வரும் "கண்ணே.. ஹ்ம்ம்.. கட்டிக்கவா.."-வை கமலும் அம்பிகாவும் சொந்தக் குரலில் பாடியிருப்பார்கள்.  பாடலில் எக்ஸ்பிரஸ் வேகம் இருக்கும்.  இப்பாடலில் எனக்குப் பிடித்த வரிகள்;
ஆண்: விடிந்தது.. நிறம் என்ன வெளுத்தது..
பெண்: இரவிலே.. மன்னன் வந்து வெளுத்தது..


செல்வி என்று சுரேஷும் ரேவதியும் நடித்த படம்.  காலக் கொடுமையால் சுரேஷும் ரேவதியும் பிரிந்திருக்க அவர்கள் வீட்டு நாய்கள் ஒன்றையொன்று காதல் செய்து சேர்த்து வைக்கும் படம்.  உலக சினிமா வரலாற்றில் முதன் முதலாக இரண்டு நாய்களுக்கு டூயட் வைத்த படம் செல்வி.  பாடல்: "இளமனது பலகனவு விழிகளிலே", பாடியவர்கள்: வழக்கம் போல் SPB & S.ஜானகி
பாடல் முழுவதுமே ஏதோ ரகசியம் பேசுவது போலவே இருவரும் பாடியிருப்பார்கள்.  இசையும் அதற்கேற்றது போலவே உடன் பயணிக்கும். சரணங்களின்  முடிவில் ஒரே வரியை high pitch-லும் பிறகு இன்னொருவர் அதை low pitch-லும் பாடுவது ஒரு வித்தியாசமான அனுபவம்.
"கொடியிடை நாணத்தில் நெளிகிறதோ, கனிகளின் பாரத்தில் வளைகிறதோ"
"விரல் பட்டு இளமொட்டு விரியட்டுமே, வெட்கம் விலகட்டும் விலகட்டுமே"

போன்ற கலக்கலான காதல் வரிகளைக் கொண்ட பாடல்.  ஹ்ம்ம்... நாய்க்கு நிக்க நேரம் இருக்காது!!!


கமல், அம்பிகா நடித்த நானும் ஒரு தொழிலாளி படத்தில் வரும் "பட்டுப் பூவே உன்னைப் பார்த்தால்" பாடலுக்கு அம்பிகா, பாலுமகேந்திரா பட நாயகியின் ஆஸ்தான உடையில் வந்து உசுப்பேத்துவார்.  இப்படத்தில் வரும் "ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும்" பாடல் சரியான fast melody.  பாடியவர்கள் மீண்டும் SPB & S.ஜானகி.  தனிமையும் கூட ஆட ஜோடியும் இருந்தால் இப்பாடலைக் கேட்டு ஆடாமல் இருக்க முடியாது. பாடலின் சரணத்தில் ஜானகி "மாமா...." என்று இழுக்க, SPB, "கண் துடிக்குது பெண் துடிக்குது கை அணைச்சிட வா" என பதில் பாட, மீண்டும் ஜானகி "புது ரோஜா...." என்று இழுப்பார் பாருங்கள்.. சான்சே இல்ல..!!


கங்கை அமரன் இசையில் வந்த ஒரு musical drama சின்ன தம்பி பெரிய தம்பி.  பிரபு, நதியா, சத்யராஜ், சுதச்சந்திரன் என்று பெரிய பட்டாளம்.  "மலரின் நுனியில் பனி விழுந்தது", "எம்பாட்டை கேட்டால் போதும்", "ஜீன்ஸ் கொடுத்த மாமா", போன்ற துள்ளலான பாடல்கள் படம் முழுவதும் விரவிக் கிடக்கும்.  இளையராஜா இசைன்னு சொல்லிட்டு கங்கை அமரன் பாடல்களைப் பற்றி எழுதும் காரணம் என்னன்னா, கங்கை அமரன் இப்படத்தில் இளையராஜா வேறு ஒரு படத்திற்கு போட்டு வைத்து கைவிடப்பட்ட ஒரு tune-ஐ இப்படத்தில் உபயோகப் படுத்தியிருப்பார்.  இதை கங்கை அமரன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கச்சேரியின் போது சொன்னார். drop ஆனது ரஜினி படம் என்பது கூடுதல் தகவல். அந்தப் பாடல் "ஒரு காதல் என்பது, உன் நெஞ்சில் உள்ளது..."  பாடலின் ஆரம்பமே அசத்தலாக இருக்கும்.  பல்லவியும் அனுபல்லவியும் நிதானத்துடன் ஆரம்பிப்பது போல இருந்தாலும் முதல் interlude-ல் இருந்து வேகம் பிடிக்கும்.


படம்: காக்கி சட்டை.  இப்படம் மரண ஹிட், "பட்டுக் கன்னம்", "சிங்காரி சரக்கு", "கண்மணியே பேசு", "பூப்போட்ட தாவனி" என படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்.  படத்தின் ஹீரோ கமலா, "தகிடு தகிடு"சத்யராஜா என்றே தெரியாது.  நம்ம பாடல்: "வானிலே தேனிலா ஆடுதே பாடுதே" மீண்டும் கமல் & அம்பிகா.  மீண்டும் SPB & S.ஜானகி.  வித்தியாசனமான ஆரம்பம்.  பாடல் முழுவதும் வரும் இசை echo effect-ல் இருக்கும்.  படத்தின் கதையோடு ஒன்றிப் பார்த்தால் அந்த echo effect ஏன் கொடுக்கப் பட்டது என விளங்கும். இரண்டாவது சரணத்திற்கு முன்பு வரும் "லா...ல லா ல.. ல ல லா..."வை இருவரும் வேறு வேறு tempo-வில் பாடுவது சரியான செவி விருந்தோம்பல்..!!


இப்பதிவில் இடம் பெற்ற பாடல்களில் சிறந்த பாடல் என இதைத் தான் சொல்வேன்.  தினமும் ஒரு முறையாவது இப்பாடலை பார்த்தோ, கேட்டோ விடுவேன்.
"சோழக் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்"
"மஞ்சமே தமிழின் மன்றமே புதிய சந்தமே சிந்தினேன்
அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்"

போன்ற "வைரமுத்"தான வரிகள்..
வீட்ல அம்மணி கூட தகராறுன்னா சமாதானம் செய்ய இப்பாடலில் வரும் "பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே, நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே" என்ற வரிகளைத்தான் பாடிக் காட்டுவேன்.
படம்: அந்த ஒரு நிமிடம், பாடியவர்கள்: அவர்களே தான், பாடல்: "சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே". அதே கமல், அம்பிகாவிற்கு பதில் இதில் ஊர்வசி.
நான் முதன் முதலில் CD to Cassette recording செய்த பாடல்.  பாடல் முழுவதுமே காதல் காட்டாற்று வெள்ளம் போல் விரவிக் கிடக்கும்.  எந்த இடத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில் எங்கு நோக்கினும் பிரித்து மேய்ந்திருப்பார் ராஜா.  "பழைய கனவு உனக்கு எதற்கு" என்று பாடும் முன் SPB ஒரு சிரிப்பு சிரிப்பாரே..!! ரணகளம்..!!

எழுத எழுத இன்னும் பல பாடல்கள் வந்து கொண்டே இருக்கிறன்றன.  "முத்தாடுதே முத்தாடுதே ராகம்", "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது", "காதல் ராகமும் கன்னித்தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ", போன்ற பல பாடல்கள் இவ்வரிசையில் உள்ளன.  "பனிவிழும் மலர்வனம்", "பொன்மானைத் தேடுதே", "மீன்கொடி தேரில்", போன்ற fast melody solo பாடல்களையும் பிறிதொரு சமயம் பிரித்து மேயலாம். மேலோட்டமாகப் பார்த்தால் எதையோ எழுதப் போய் கடைசியில் கமல் படப் பாடல்களை பற்றி எழுதியது போன்ற ஒரு உணர்வு. அதையும் தனியாக வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுவோம்.  அடுத்த பாகத்தில் சந்திப்போம்...
 
அன்புடன்
மலர்வண்ணன்